வெற்றிமாறன் படங்கள் எல்லாம் இரிடேட்டாம்.. தேவயானி கணவருக்கு இது தேவையா?.. வாண்ட்டடா வண்டில ஏறுறாரே
சென்னை: இயக்குநர் ராஜகுமாரன் நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். கோலிவுட்டின் ஐடியல் ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ராஜகுமாரனை பொறுத்தவரை சினிமா இயக்குவதை சுத்தமாக நிறுத்திவிட்டார். இடையில் சில படங்களில் நடிக்க மட்டும் செய்தார். இந்தச் சூழலில் அவர் கொடுத்த பேட்டியை வைத்து ரசிகர்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
விக்ரமனிடம் பல வருடங்கள் உதவி இயக்குநராக இருந்துவிட்டு நீ வருவாய் என படத்தை இயக்கியவர் ராஜகுமாரன். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கினார். அதுவும் ஓரளவுக்கு ரெஸ்பான்ஸை பெற்றது. அதற்கு பிறகு அவர் சில படங்கள் இயக்கியிருந்தாலும்; அந்தப் படங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேவயானியுடன் திருமணம்: அவர் இயக்கிய முதல் இரண்டு படங்களிலுமே தேவயானிதான் ஹீரோயினாக நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. மேலும் கடந்த 2001ஆம் ஆண்டு அவர்கள் திருமணமும் செய்துகொண்டார்கள். தேவயானி பீக்கில் இருந்தபோதே அவரை ராஜகுமாரன் திருமணம் செய்துகொண்டதை பார்த்து ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆச்சரியத்தில் மூழ்கித்தான் போனது.

இயக்கத்தை நிறுத்திய ராஜகுமாரன்: திருமணத்துக்கு பிறகு தேவயானி தொடர்ந்து நடித்தாலும்; ராஜகுமாரன் பெரிதாக இயக்கத்தில் வெற்றி பெறவில்லை. கடைசியாக அவர் தனது மனைவியை வைத்து திருமதி தமிழ் என்ற படத்தை இயக்கினார். அதில் அவரும் நடித்திருந்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. தோல்வி மட்டுமின்றி அதில் இடம்பெற்ற பாடல்கள், காட்சிகள் என அனைத்தையும் பலரும் மீம் டெம்ப்ளேட்டாகவும் சில காலம் உபயோகப்படுத்தினார்கள்.
ராஜகுமாரனின் பேட்டி: இயக்கத்தை நிறுத்திய அவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கடுகு உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில் அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நான் ஒரு உண்மையை சொல்கிறேன். நம்முடைய பெரிய டைரக்டர் வெற்றிமாறன் இருக்கிறாரே. அவரது ஒரு படத்தைக்கூட நான் முழுவதுமாக பார்த்ததில்லை. பெரிய இயக்குநர்தான். பெரிய வெற்றிகளை கொடுத்திருக்கிறார்தான்.
வெளுத்தெடுக்கும் ரசிகர்கள்: ஒரே இரிட்டேட்டாக இருக்கும். ரொம்பவே இறுக்கமாக இருக்கும். கேரக்டர் கொடூரமாக இருப்பார்கள். படத்தை ஆஃப் செய்துவிடுவேன். அதேபோல் பா.இரஞ்சித் படங்களில் அட்டகத்தி மட்டும்தான் பார்த்தேன். மற்ற எந்த படங்களும் பார்ப்பதில்லை. ஒருமாதிரி அவர்களுக்கு என்ன சிந்தனை என்று தெரியவில்லை. கர்ண கொடூரமாக இருக்கிறது" என்றார்.
இதனைப் பார்த்த ரசிகர்களோ, இவர் எடுத்ததே 3 படங்கள்கூட இருக்காது. ஆனால் இவர் வெற்றிமாறன், இரஞ்சித் படங்களை விமர்சிக்கிறார். இது வேறு ஒன்றும் இல்லை அவர்களது படங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிக்கு ஆதரவாக இருக்கிறது. அதனை இவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தேவயானி கணவருக்கு இது தேவையா என்று வெளுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.


Click it and Unblock the Notifications











