விவசாயிகளுக்காக பந்த்... 25-ம் தேதி தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து!
சென்னை: விவசாயிகளுக்காக வரும் 25-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடத்தப்படும் முழு அடைப்புக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
விவசாயிகள் வாங்கிய அனைத்து வங்கிக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும், கூடுதல் வறட்சி நிவாரணம் கூடுதலாக வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று போராட்டத்தின் 40வது நாள். உச்சகட்டமாக சிறு நீர் குடிக்கும் போராட்டத்தை நடத்தியும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது நெஞ்சைப் பிசைவதாக உள்ளது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் நடைபெறு வரும் இப்போராட்டத்திற்கு, தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25ம் தேதி (செவ்வாய் கிழமை) மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதேபோல் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
சினிமா காட்சிகள் ரத்து
இந்நிலையில், இந்த முழு அடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் பங்கேற்கிறது. தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் காலை மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











