அம்மாவிடம் கேளுங்கள், தரப்படும்!- ஃபெப்சி தலைவர் அமீர்

ராஜீவ் கொலை வழக்கில் நீண்ட காலமாக தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவு குறித்து ஃபெப்சி தலைவர் அமீர் மற்றும் செயலாளர் ஜி சிவா வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர்கள் துயர் துடைக்கும் போராட்டங்களில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனும் தன் பங்குக்கு பல்வேறு அறவழி போராட்டங்களை நடத்தியுள்ளது.
குறிப்பாக கடந்த 21.10.2008-ல் சென்னையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் மற்றும் 5.11.2008 அன்று சாலிகிராமத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்திக் காட்டியுள்ளோம்.
இந்த அறவழிப் போராட்டங்களில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கு தண்டனையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளோம்.
கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்பதற்கேற்பவும், அம்மாவிடம் கேளுங்கள், அவர் இல்லையென்று சொல்லுவதில்லை என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக, புரட்சித் தலைவி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உயர்ந்த எண்ணத்தோடு சட்டமன்ற வரலாறு போற்றும் தீர்மானத்தை இயற்றி தூக்கு தண்டனை கைதிகளை விடுவிக்க வழிவகை செய்து கொடுத்ததற்காக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











