ஃபெப்சி வேலை நிறுத்தம் வாபஸ்... ரஜினி உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டதால் வாபஸ்! - செல்வமணி
சென்னை: தங்களது வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக சினிமா தொழிலாளர் அமைப்பான ஃபெப்சி இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் இரண்டரை நாட்களாகத் தொடர்ந்த ஃபெப்சி வேலை நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளது.
சம்பளப் பிரச்சினையை முன்வைத்து பில்லா பாண்டி படத்தின் ஷூட்டிங்கில் டெக்னீஷியன் யூனியன் தலைவர் தனபால் என்பவர் அத்துமீறி பேக்கப் சொன்னதால் அதன் படப்பிடிப்பு நின்றது. இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் இனி ஃபெப்சி தொழிலாளர்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று கூறி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்தப் பிரச்சினையைப் பேசித் தீர்க்க ஃபெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி முனைந்தார். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்து பிடிவாதம் காட்டியதால், திடீரென வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்தம் தொடங்கியது. ரஜினியின் காலா, விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட 37 படங்களின் ஷூட்டிங்குகள் நின்றுபோயின. இன்று மூன்றாவது நாளாக படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையே நேற்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார் ஃபெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி. அப்போது வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டு, பேச்சு நடத்துங்கள். விட்டுக் கொடுத்து நல்ல முடிவுக்கு வாருங்கள் என அறிவுறுத்தி அனுப்பினார் ரஜினி. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளையும் சமரசமாகப் போகுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்த ஃபெப்சி தலைவர் ஆர் கே செல்வணி, ஃபெப்சியின் வேலை நிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவித்தார்.
"ரஜினிகாந்த் உள்ளிட்ட மூத்த கலைஞர்களின் அறிவுறுத்தல் மற்றும் திரைத்துறையின் நலனை முன்வைத்து இந்த வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்படுகிறது. பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளும் முயற்சிகள் தொடரும்," என்றார் ஆர்கே செல்வமணி.


Click it and Unblock the Notifications











