40 ஆண்டு கால பிரச்சினையை 4 மாதங்களில் தீர்க்க முடியுமா? விஷாலின் அறிவிப்புக்கு ஃபெப்சி கடும் கண்டனம்
சென்னை: திரைப்பட தொழிலாளர் அமைப்பான ஃபெப்சியுடனான ஒப்பந்தம் ரத்து என்றும், இனி தயாரிப்பாளர்கள் யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது ஃபெப்சி.
ஃபெப்சி - தயாரிப்பாளர்கள் பிரச்சினை பல ஆண்டு காலமாகத் தொடர்ந்து வருகிறது. யூனியன் விதிகளைக் காட்டி ஃபெப்சியில் அங்கம் வகிக்கும் சில அமைப்புகள் தயாரிப்பாளர்களுக்கு தேவையில்லாத செலவுகளை இழுத்துவிடுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இன்னும் சில அமைப்புகள் படப்பிடிப்பையே நிறுத்திவிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இப்படி நடக்கும் ஒவ்வொரு முறையும் மோதல் வெடிப்பதும் பின் சமரசப் பேச்சு நடப்பதும் வழக்கம்.

ஆனால் இந்த முறை இனி பொறுப்பதற்கில்லை என்று முடிவெடுத்து, இனி எங்களுக்கு ஃபெப்சி தொழிலாளர்கள் தேவை இல்லை... யாரை வைத்து வேண்டுமானாலும், எத்தனைப் பேரைக் கொண்டும் வேலை வாங்கிக் கொள்ளலாம் என முடிவெடுத்து அறிவித்துவிட்டது விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம்.
இந்த முடிவை அமல்படுத்துவதிலும் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் ஃபெப்சி தலைவராக உள்ள ஆர் கே செல்வமணி, விஷாலின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"விஷாலின் இந்த முடிவை ஏற்க முடியாது. இந்த தன்னிச்சையான முடிவைக் கண்டிக்கிறோம். ஃபெப்சியில் இல்லாதவர்களை கண்டிப்பாக படப்பிடிப்புக்குப் பயன்படுத்தக் கூடாது. ஃபெப்சி - தயாரிப்பாளர் பிரச்சினை இன்று நேற்றல்ல.. 40 ஆண்டு காலமாக இருந்து வருகிறது. படத் தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்துதான் ஃபெப்சி அமைப்பு செயல் படுகிறது. ஆனால் தொழிலாளர்களின் நிலையை தயாரிப்பாளர்கள் உணர்வதில்லை.
40 ஆண்டுகால பிரச்சனையை 4 மாதத்தில் தீர்த்து விட முடியாது என்பதை விஷால் உணர வேண்டும். இந்தப் பிரச்சினையைப் பேசித் தீர்க்கலாம்," என்றார் ஃபெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி.


Click it and Unblock the Notifications











