தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை வேலை நிறுத்தம்!- இது சூப்பர் ஸ்டார் பஞ்ச்
தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை வேலை நிறுத்தம் என்று இன்று கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அவர் இதை முதல் முறையாகச் சொல்லவில்லை. 1996-ம் ஆண்டும் இதே போல ஃபெப்சி - தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பிரிந்து நின்று மோதினர். ஃபெப்சி தொழிலாளர்களை வேலைக்கு அழைக்காமல் படைப்பாளிகள் புறக்கணித்தனர்.

இதை முதலில் கண்டித்தவர் ரஜினிதான். இந்த புறக்கணிப்பு, வேலை நிறுத்தம் எதிலும் எனக்கு உடன்பாடில்லை. துறையின் வளர்ச்சிக்கு இந்த இரண்டும் பெரும் தடை. உடனடியாக இணக்கமாகப் பேசி முடிவு காணுங்கள் என அறிவுறுத்தினார். அடுத்து களமிறங்கிய கமல், ஃபெப்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். தனது காதலா காதலா படத்தில் ஃபெப்சிக்கு ஆதரவாக வசனமும் வைத்தார். கமலை ரஜினியும் ஆதரித்தார்.
இன்று இன்னும் மோசமான நிலை. ஃபெப்சியை முற்றாகப் புறக்கணிப்பதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
ஃபெப்சி தொழிலாளர்கள் பணி செய்ய முடியாமல் போனதால், ரஜினியும் தனது படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார். தொழிலாளர்களை வெளியில் நிறுத்திவிட்டு எப்படி படப்பிடிப்பு நடத்த முடியும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் இன்று அவரை ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி ரஜினியைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம், "வேலை நிறுத்தம் செய்வது தேவையற்றது. பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய சாதாரண பிரச்சினை இது. தயாரிப்பாளர் சங்கத்துடன் பேசுங்கள். நானும் சொல்கிறேன்," என்று கூறியுள்ளார்.
ஃபெப்சியுடன் இனி பேச்சே இல்லை என்று கூறி வந்தது விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம். இப்போது ரஜினி அறிவுறுத்தல் காரணமாக ஃபெப்சி - தயாரிப்பாளர் சங்கம் பேச்சு நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











