பெப்சி - தயாரிப்பாளர் சங்கம்... பஞ்சாயத்து தீர்ந்ததா?
சென்னை : பெப்சி தொழிலாளர்களுக்கு மாற்றாக புதிய பணியாளர்களைத் தேர்வு செய்ய தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக விளம்பரமும் வெளியானது.
இதனைக் கண்டித்து கடந்த 1-ம் தேதி முதல் பெப்சி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகிறது. இன்று 5-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்கிறது.
இதன்காரணமாக 'காலா', 'தானா சேர்ந்த கூட்டம்' உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தயாரிப்பாளர் சங்கத்தைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டமும் நடைபெறுவதாக இருந்தது.

பேச்சுவார்த்தை :
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் உடன் பெப்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை 4 மணி நேரம் நடந்தது.

வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் :
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இரண்டு நாட்களுக்குள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் எனவும் கூறினார்.

விஷால் :
பின்னர் பேசிய தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், "புதிய டெக்னிஷியன்களுக்கான அரிய வாய்ப்பு" என்ற விளம்பரத்தைத் திரும்பப் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் ரத்து :
இதனிடையே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு எதிராக இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக பெப்சி அறிவித்தது.


Click it and Unblock the Notifications











