ஃபெப்சி வேலை நிறுத்தம்... மூன்றாம் நாளாக படப்பிடிப்புகள் பாதிப்பு!
சென்னை: தயாரிப்பாளர்கள் - ஃபெப்சி தொழிலாளர்களிடையே நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக தொடர்ந்து இரண்டாம் நாளாக தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று மூன்றாவது நாளும் நிலைமையில் முன்னேற்றமில்லாததால், இதே நிலை தொடர்கிறது.
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் என்று அறிவித்தது ஃபெப்சி. ஆனால் பின்னர், இது வேலை நிறுத்தம் அல்ல, தயாரிப்பாளர் சங்கம் எங்களைப் புறக்கணித்ததால் வந்த நிலை என்று ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தெரிவித்தார்.

பெயர் என்னவாக இருந்தாலும், வேலை நிறுத்தம் என்பதால் படப்பிடிப்புகள் முடங்கிவிட்டன.
ரஜினியின் காலா படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் நாள் நிறுத்தப்பட்டது. அடுத்த நாளும் படப்பிடிப்பு நடக்கவில்லை.
விஜய்யின் மெர்சல் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. விஷாலின் துப்பறிவாளன் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகச் சொன்னாலும், அது ஒப்புக்காக சில மணி நேரம் நடந்து, போதிய தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லாததால் தடுமாறிக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஃபெப்சி அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்கள் இல்லாமல் படப்பிடிப்பை முழுமையாக நடத்த முடியாது என்பதே உண்மை என்பதால், படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் கைபிசைந்து நிற்கிறார்கள்.
இருதரப்பும் அன்பாகப் பேசி பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் இன்று அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு ஃபெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தை அழைத்துள்ளதாகத் தெரிகிறது. இதில் ஏதாவது உடன்பாடு எட்டப்படுமா?


Click it and Unblock the Notifications











