50 ஆண்டு திரையுலக சாதனை.. கே ஜே யேசுதாசுக்கு சென்னையில் பாராட்டு விழா!
சென்னை: தனது கந்தர்வ குரலால் கடந்த 50 ஆண்டுகளாக ரசிகர்களை கிறங்கடித்து வரும் கேஜே யேசுதாசுக்கு வரும் ஜனவரி 25-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு... கண்ணே கலைமானே.... அதிசயராகம் ஆனந்த ராகம்... செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்... அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என காலத்தால் அழிக்க முடியாத காவியப் பாடல்களைப் பாடியவர் யேசுதாஸ்.

அவருக்கு 75 வயது பிறந்துள்ளது. மலையாளக் கரையில் இருந்து வந்திருந்தாலும் தமிழ் இசையின் தவப்புதல்வனாகவே மாறிப்போனார்.
தமிழில் எஸ்.பாலசந்தரின் பொம்மை படத்தில் நீயும் பொம்மை நானும் பொம்மை நினைத்து பார்த்தால் எல்லாம் பொம்மை என்ற தத்துவ பாடல் பாடி முதன்முதல் அறிமுகமானார்.
இந்த 50 ஆண்டுகளில் 17 மொழிகளில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.
சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 7 முறையும், பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளை 43 முறையும் வென்றவர்.
சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த யேசுதாசுக்கு ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை தரங்கிணி, வி ரெக்கார்ட்ஸ், ராஜ் ஈவண்ட்ஸ் இணைந்து ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
ஜனவரி 25ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.


Click it and Unblock the Notifications











