பிரபல டப்பிங் கலைஞர் பற்றி அவதூறு கருத்து.. சினிமா இயக்குனர் திடீர் கைது.. திரையுலகில் பரபரப்பு!
திருவனந்தபுரம்: டப்பிங் கலைஞர் பற்றி அவதூறு பரப்பியதாக, பிரபல சினிமா இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.
சமூக வலைதளங்களில், நடிகர், நடிகைகள் உட்பட பலரை அவதூறாக சித்தரிக்கும் போக்கும் சமீபத்தில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பிரபல டப்பிங் கலைஞரை பற்றி இயக்குனர் ஒருவர் அவதூறாக பேசி யூடியூப்பில் வெளியிட்ட கருத்து சர்ச்சையானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டப்பிங் பாக்யலட்சுமி
பிரபல மலையாள டப்பிங் கலைஞர் பாக்யலட்சுமி. இவர் நடிகை ஷோபனாவுக்கு அதிகமாக மலையாள டப்பிங் பேசியுள்ளார். ஊர்வசி, கனகா, ரேகா, மதுபாலா, சுகாசினி, பிரியாராமன் உட்பட பல நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார். சிறந்த டப்பிங்கிற்காக விருதுகளையும் பெற்றுள்ளார்.

அவதூறாகவும் சித்தரித்து
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன், மகளிர் செயற்பாட்டாளர்களை ஆபாசமாகவும் அவதூறாகவும் சித்தரித்து யூடியூப்பில் வெளியிட்ட, விஜய் பி நாயர் என்பவர் மீது கருப்பு மையை ஊற்றி தாக்கினார். மகளிர் அமைப்பினருடன் சேர்ந்து இதை செய்ததை அடுத்து பரபரப்பானார். இதற்காக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்திவிளா தினேஷ்
இந்நிலையில் டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி பற்றி, மலையாள திரைப்பட இயக்குனர் சந்திவிளா தினேஷ் என்பவர் அவதூறு கருத்துகளைக் கூறி யூடியூப்பில் வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பாக்கியலட்சுமி, போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் தினேஷை எச்சரித்து அனுப்பினர்.

ஜாமீனில் விடுதலை
பின்னர் அவர் மீண்டும் அவதூறு கருத்துகளை வெளியிட்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போலீசிலும் முதலமைச்சரிடமும் பாக்யலட்சுமி புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார், இயக்குனர் சந்திவிளா தினேஷை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.


Click it and Unblock the Notifications











