தமிழ் சினிமாவின் முழுமையான ஆதரவுடன் நடந்த தமிழக பந்த்! #TamilNaduBandh
தமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாது... இரண்டும் பின்னிப் பிணைந்தவை. எந்த சமூக, அரசியல் பிரச்சினையாக இருந்தாலும் சினிமா பிரபலங்களின் கருத்து, போராட்டமும் இணைந்தால்தான் முழுமை பெறும் என்ற நிலை.
பொதுவாக எதிர்க்கட்சிகள் நடத்தும் பந்த், கடையடைப்புகளில் பட்டும் படாமலும் இருந்து கொள்வது தமிழ் சினிமா வழக்கம்.

ஆனால் இது தமிழர்களின் உணர்வுப் பூர்வமான பிரச்சினை, ஜீவாதாரப் பிரச்சினையான காவிரி தொடர்புடையது என்பதால் அத்தனை சினிமா அமைப்புகளும் தங்களின் முழுமையான ஆதரவை அளித்தன.
இதற்காக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு தலைமையில் அனைத்து சங்கங்களும் ஒன்றாகத் திரண்டு, திரையுலகின் ஒட்டு மொத்த ஆதரவையும் இந்த முழு அடைப்புக்கு வழங்குவதாக அறிவித்தனர்.
அறிவித்தது போலவே, முழுமையான ஆதரவை இன்று வழங்கினர். காலை 6 மணியில் தொடங்கி மாலை 6 மணி வரை எந்த சினிமா வேலைகளும் நடக்கவில்லை.
படப்பிடிப்பு, டப்பிங், எடிட்டிங், இசைக் கோர்ப்பு என அனைத்தையும் நிறுத்தி வைத்தனர். திரையரங்குகள் அனைத்திலும் மாலை 6 மணி வரை காட்சிகள் நிறுத்தப்பட்டன. பெரும்பாலான திரைக் கலைஞர்கள், பிரபலங்கள் இன்று கருப்புச் சட்டை அணிந்து கர்நாடகத்தின் மூர்க்கத்தனத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











