குவியும் ஆதரவு.... ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகத் திரளும் திரைப் பிரபலங்கள்!
நேற்று முன் தினம் வரை திரையுலகில் வீசிக் கொண்டிருந்த சசி ஆதரவுக் காற்று, இப்போது மெல்ல மெல்ல முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளது.
பல பிரபலங்கள் வெளிப்படையாகவே ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் முதலில் நிற்பவர் நடிகர் கமல் ஹாஸன். அவரது ட்வீட்டுகள் புரியவில்லை என்ற கிண்டல் இருந்தாலும், அவை துணிச்சலாக ஓபிஎஸ்ஸை ஆதரிக்கும் தொனியில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. "ஓபிஎஸ் திறமையானவர். ஜல்லிக்கட்டு விவகாரத்தைச் சிறப்பாகக் கையாண்டார். அவரே முதல்வராகத் தொடரட்டும்," என தெளிவாக பேட்டியும் கொடுத்துவிட்டார் கமல்.

கௌதமி
அவரது முன்னாள் லைஃப் பார்ட்னரான கௌதமியும் ஓபிஎஸ்ஸைத்தான் ஆதரிக்கிறார். "அம்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஓபிஎஸ். அவர் சிறப்பாக செயலாற்றினார். அவரே முதல்வராகத் தொடரட்டும்," என்கிறார்.

சித்தார்த்
நடிகர் சித்தார்த், "மெரினாவில் ஓ.பி.எஸ். தமிழக அரசியல் உண்மையாகவே கேம் ஆப் த்ரோன்ஸ் மற்றும் ஹவுஸ் ஆப் கார்ட்ஸ் சீரியல்களைப்போலவே இருக்கிறது," என்று கூறியுள்ளார்.

இமான்
இசையமைப்பாளர் இமான், "தமிழக அரசியலில் நம்பிக்கை துளிர்விட்டு இருக்கிறது. இதுதான் சிறந்த வழி. சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்து சரியான பேச்சு. நீதி நிலை நாட்டப்பட்டு இருக்கிறது," என்று கூறியுள்ளார்.

அருள்நிதி
நடிகர் அருள்நிதி, "தமிழக மக்களுக்கு உண்மையை தெரிவித்து நேர்மையாக நடந்து இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். தைரியமான பேச்சு," என்று கூறியுள்ளார்.

குஷ்பு
நடிகை குஷ்பு, "ஒரு நாயகன் உதயமாகிறான்," என்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டு உள்ளார்.

மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான் கூறும்போது, "ஓ.பன்னீர்செல்வம் இன்று ஒரிஜினல் பன்னீர்செல்வம் ஆகி இருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கிண்டல்களை எதிர்கொண்டவர் அவர். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் பதிவான சி.சி.டி.வி கேமரா காட்சிகளை 3 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் இல்லையென்றால் தமிழகம் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்களை உடைக்கும் போராட்டத்தை நடத்துவேன்," என்று கூறியுள்ளார்.

கங்கை அமரன்
திருப்பூரில் இசையமைப்பாளர், இயக்குநர், இப்போது சென்சார் குழு உறுப்பினர் கங்கை அமரன் பேசுகையில், "சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன். என் சொத்துகளை அபகரிக்க உடந்தையாக இருந்தவர். இவர் ஆட்சியில் அமருவது நியாயமா? ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை வெளிக்கொண்டு வரவேண்டும். பன்னீர்செல்வம் உண்மையான ஆம்பளை.
சொத்து குவிப்பு தொடர்பான வழக்கு நிலுவையாக உள்ள சூழலில், எதற்காக முதல்வராக வரவேண்டும் என்று சசிகலா அவசரம் காட்டுகிறார்? எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு சசிகலாவுக்கு இருந்தாலும், மக்களின் ஆதரவு பன்னீர்செல்வத்துக்குத்தான்," என்றார்.

கே பாக்யராஜ்
இயக்குநர் நடிகர் கே பாக்யராஜும் பன்னீர் செல்வத்தை ஆதரித்துள்ளார். பன்னீர் செல்வமே முதல்வராகத் தொடரட்டும் என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











