பாடகி சித்ராவின் மகள் உடலுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

சித்ராவுக்குத் திருமணமாகி 15 ஆண்டு காலம் கழித்துப் பிறந்த செல்ல மகள் நந்தனா. ஆட்டிசம் பாதிப்பைக் கொண்டிருந்த தனது மகளை விட்டுப் பிரியாமல் பாசத்துடன் வளர்த்து வந்தார் சித்ரா. எங்கு போனாலும் மகளையும் உடன் அழைத்துச் செல்வார்.
மகளுக்காகவே பிரத்யேகமாக பாடல்கள் பாடி டிவிடி வடிவில் வீட்டில் வைத்திருப்பார். தான் ஒருவேளை மகளை உடன் அழைத்துச் செல்ல முடியாமல் போனால் இந்த டிவிடியை கேட்குமாறு வீட்டில் சொல்லி விட்டுச் செல்வார் சித்ரா. அந்த அளவுக்கு சித்ராவின் குரல், நந்தனாவுடன் இருந்து கொண்டே இருக்கும்.
ஆட்டிசம் பாதிப்பைக் கொண்டிருந்தாலும், தனது மகளை சாதாரண குழந்தைகளைப் போலவே வளர்த்து வந்தார் சித்ரா. சென்னையில் உள்ள பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்திருந்தார்.
8 வயதான நந்தனாவை, துபாயில் நடைபெறும் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அழைத்துச் சென்ற சித்ராவுக்கு இப்படி ஒரு பயங்கர துக்க சம்பவம் நடைபெறும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. நீச்சல் குளத்தில் மூழ்கிய குழந்தை நந்தனா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்ரா, குழந்தையை தனது மடியில் கிடத்தி கதறி அழுதது அத்தனை பேரையும் உருக்கி விட்டது.
நீண்ட காலம் கழித்து கடவுள் தனக்கு வரத்தை மீண்டும் எடுத்துக் கொண்டு விட்டாரே என்று கதறி அழுதார் சித்ரா.
நந்தனாவின் உடல் இன்று காலை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் சாலிகிராமத்தில் உள்ள சித்ராவின் வீட்டுக்கு உடலைக் கொண்டு வந்தனர்.
இதையடுத்து திரையுலகினர் பெருமளவில் திரண்டு வந்து குழந்தையின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பழம்பெரும் பாடகிகள் பி.சுசீலா, எஸ்.ஜானகி, பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுதபடி அஞ்சலி செலுத்தினர்.
எஸ்.ஜானகி பின்னர் கூறுகையில், சித்ராவுக்கு இப்படி ஒரு துக்கம் ஏற்பட்டிருக்கக் கூடாது. மிகுந்த வேதனையாக இருக்கிறது. நிச்சயம் சித்ராவுக்கு இன்னொரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தை, சித்ராவின் வாழ்க்கையில் மீண்டும் மலர்ச்சியை உருவாக்கும் என்றார்.
நந்தனாவின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவுள்ளன.


Click it and Unblock the Notifications











