சிலை கடத்தல் வரை போய்விட்டது சினிமா தொழில்! - அருண்பாண்டியன் பேச்சு
சென்னை: தமிழ் சினிமா மிகுந்த நெருக்கடி நிலையில் உள்ளது. எடுத்த படத்தை வெளியிட முடியாத நிலை. இதனால்தான் ஒரு தயாரிப்பாளர் சிலை கடத்தல் வரை போயிருக்கிறார், என்றார் தயாரிப்பாளரும் எம்எல்ஏவுமான அருண்பாண்டியன்.
நடிகர் அருண்பாண்டியன் வழங்கும் ஏ & பி குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதா பாண்டியன், எஸ்என் ராஜராஜன் தயாரிக்கும் படம் 'சவாலே சமாளி'. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

விழாவில் நடிகர் நாசர் பேசுகையில், "சென்ற ஆண்டு இதே நேரத்தில் நான் மிகவும் மோசமான நிலைமையில் இருந்தேன். எனது மகனுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற போது அங்கே ஏர்போட்டில் அருண்பாண்டியன் அவர்கள் எனக்காக காத்திருந்து உங்கள் மகன் விரைவில் குணமடைவான் என்று சொல்லி பூங்கொத்து கொடுத்து வரவேற்று மருத்துவ ஏற்பாடுகளை செய்து முதல் கட்ட சிகிச்சைக்கு பணமும் செலுத்தி உதவி செய்தார்.

நான், அருண்பாண்டியன், ராம்கி மூவரும் 33 வருடங்களுக்கு முன்பு சினிமா கனவுகளுடன் ஒன்றாகப் போராடினோம். இன்று மூவரும் ஜெயித்து விட்டோம். அருண்பாண்டியன் இப்பொழுது தயாரிப்பாளராகவும் களமிறங்கி இருக்கிறார் நிச்சயம் இந்த படம் அவருக்கு வெற்றி படமாக இருக்கும்.
படம் தயாரிக்க எனக்கும் ஆசைதான் ஆனால் என் மனைவி காமிலா வீட்டின் கதவை அடைத்துவிடுவார்," என்றார்.
தயாரிப்பாளர் அருண்பாண்டியன் பேசுகையில், "முன்பு எல்லாம் படம் எடுத்து அதை ரிலீஸ் செய்வது ஈசியாக இருந்தது. பைனான்சியர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள் நடிகர்கள் அனைவருக்கும் படம் தயாரிப்பில் பங்கு இருக்கும்.
ஆனால் இப்போது படத்தின் பெரும்பகுதி பணம் நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோருக்குத்தான் போகிறது. ஆனால் படம் ரிலீஸ் செய்யும் போது அந்த தயாரிப்பளாருக்கு யாரும் உதவி செய்வதில்லை. படம் சேட்டிலைட் கூட விற்பதில்லை. அனைத்தும் தயாரிப்பாளர் தலையில்தான் முடிகிறது. இதனால் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் தனது படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் சிலை கடத்தல் வரை சென்றுள்ளார்.
இந்த படத்தை நானே சொந்தமாக உலக முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறேன் இதை கேள்வி பட்ட அசோக்செல்வன், பிந்துமாதவி இருவரும் தங்களது சம்பளத்தில் ஐந்து ஐந்து லட்சம் விட்டு தருவதாக கூறினார்கள். அனால் நான் அவர்களது பெருந்தன்மையை மதித்து அவர்களுக்கு முழு சம்பளத்தையும் செட்டில் செய்து விட்டேன். இன்று பல கோடி சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் அந்த படத்தின் வெளியீட்டின் போது அந்த தயாரிப்பாளரின் பிரச்னைகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் கூட உதவ முன்வருவதில்லை," என்று கூறினார்.

விழாவில் நடிகர் ராம்கி, நிரோஷா, அசோக்செல்வன், பிந்துமாதவி, பாடலாசிரியர் சிநேகன், ஒளிப்பதிவாளர் பி.செல்வகுமார், இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன், கவிதாபாண்டியன், எஸ்.என்.ராஜராஜன், கீர்த்திபாண்டியன், படத்தின் இயக்குனர் சத்யசிவா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.


Click it and Unblock the Notifications