Don't Miss!
- News இந்தியாவில் அமெரிக்காவின் ’பரம்பரை’ வரி தேவை என பேசிய பாஜக எம்பி.. மோடி பதில் என்ன? சீறும் காங்கிரஸ்
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
இப்படித்தான் வளர்ந்தது தமிழ் சினிமா.. இதோ சில 'முதல்கள்'!
தமிழ் சினிமா எப்படிப் பிறந்தது? அதற்கு முன்னோடி யார்? முதல் படத்தை எடுத்தது யார்?
இவை பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரியாத சில தகவல்களை இங்கே தருகிறோம். கோடம்பாக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் புதுமைகளும், வளர்ச்சிகளும் இப்படித்தான் ஆரம்பித்தன...
இவற்றை இரண்டு பகுதிகளாகத் தருகிறோம்.
பிதாமகன்
தமிழ் சினிமாவின் பிதாமகன் என்றால் அது ஆர் நடராஜ முதலியார்தான். 1916-ல் முதல் முறையாக சினிமா ஸ்டுடியோவை அறிமுகப்படுத்தினார். அதன் பெயர் இந்தியா பிலிம் கம்பெனி. நிறுவப்பட்ட இடம் பெங்களூரு.
சென்னையில் வெயில் அதிகம் என்பதால், ஏசி வசதி இல்லாத அந்த நாளில் பெங்களூரில் சொந்தமாக லேப் நிறுவியுள்ளார். பின்னர் வேலூரில் சொந்தமாக ஸ்டுடியோ நிறுவி தன் படங்களை அங்கு வைத்து பிரின்ட் போட்டு புரட்சி செய்த சாதனையாளர். 1917 முதல் 1921 வரை திரௌபதி வஸ்திரபரனம், மைத்திரேயி விஜயம், லவ குசா, மஹிரவனன், மார்க்கண்டேயன், கலிங்க மர்தனம், ருக்மணி கல்யாணம் ஆகிய படங்களை எடுத்தார். இந்தப் படங்களின் ப்ராசஸிங் அவரது வேலூர் ஸ்டுடியோவிலேயே நடந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் பேசும் படம்
தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் காளிதாஸ். தயாரித்த நிறுவனம் அர்தேஷிர் இராணியின் இம்பீரியல் மூவிடோன். ஹெச்எம் ரெட்டி இயக்கிய இந்தப் படத்தின் நாயகி டிபி ராஜலட்சுமி. தமிழ் சினிமாவின் முதல் ஹீரோயின் இவர்தான். இந்தப் படத்தில் பாடல் எழுதிய மதுர பாஸ்கரதாஸ்தான் தமிழின் முதல் பாடலாசியர். இந்தப் படத்தில் நடித்த கங்காளராவ்தான் முதல் ஹீரோ. இவை அத்தனையும் நடந்த ஆண்டு 1931.
சென்னையில்...
காளிதாஸ் முதல் தமிழ் பேசும் படம் என்றாலும், அது தயாரானது மும்பையில். சென்னையில் தயாரான முதல் பேசும் படம் ஸ்ரீனிவாச கல்யாணம். தயாரிப்பாளர் - இயக்குநர் ஏ நாராயணன். ஆண்டு 1934. இந்தப் படத்தில்தான் முதல் பெண் ஒலிப்பதிவாளர் அறிமுகமானார். அவர் மீனாட்சி நாராயணன்.
படமான முதல் நாவல்
தமிழில் படமாக்கப்பட்ட முதல் நாவல் வடுவூர் துரைசாமி அய்யங்காரின் மேனகா. அதே பெயரில் 1935-ல் படமாக வெளிவந்தது. ராஜா சாண்டோ இயக்கிய இந்தப் படத்தை டிகேஎஸ் சகோதரர்கள் தயாரித்தனர்.
முதல் சினிமா பத்திரிகை
தமிழில் வெளியான முதல் சினிமா பத்திரிகை சினிமா உலகம். பிஎஸ் செட்டியார் அதன் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர். ரொம்ப காலம் வந்த சினிமா பத்திரிகை இது.
முதல் பெண் தயாரிப்பாளர்
முதல் ஹீரோயின் போலவே முதல் பெண் தயாரிப்பாளர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் டிபி ராஜலட்சுமிதான். படம் மிஸ் கமலா. வெளியான ஆண்டு 1936. அடுத்த ஆண்டில் ஒரு பெண் இசையமைப்பாளர் அறிமுகமானார். பெயர் ராஜம் புஷ்பவனம். படம் ராஜசேகரன்.
முதல் ட்ரூ கலர் படம்
ட்ரூ கலர் எனும் இயற்கை வண்ணத்தில் வெளியான முதல் படம் தர்மபுரி ரகஸ்யம். 1938-ல் வெளியான இந்தப் படத்தை ஜிஆர் சேத்தி என்பவர் இயக்கியிருந்தார்.
முதல் டபுள் ஆக்ட்
முதல் இரட்டை வேடப் படம் என்ற பெருமை பியு சின்னப்பா நடித்த உத்தமபுத்திரனுக்குத்தான். 1940-ல் வெளியான இந்தப் படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டிஆர் சுந்தரம் இயக்கியிருந்தார். ப்ளாக்பஸ்டர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது இந்தப் படத்தின் வெற்றிக்காகத்தான்.
பிரமாண்டம்
பிரமாண்டம் என்ற வார்த்தைக்கு முதல் இலக்கணமாக அமைந்தது சந்திரலேகா. ரூ 40 லட்சம் செலவில் 609 பிரதிகளுடன் வெளியான இந்தப் படம் வசூலில் பெரும் சாதனைப் படைத்தது. 1948-ல் வெளியான இந்தப் படத்தை ஜெமினி அதிபர் வாசன் இயக்கினார்.
முதல் ஏ
தமிழ் சினிமாவில் ஏ சான்று பெற்ற முதல் படம் மர்மயோகி. எம்ஜிஆர் நடித்து. கே ராம்நாத் இயக்கிய படம். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1951-ல் வெளியான படம் இது.
முதல் வண்ணப்படம்
தமிழின் முதல் வண்ணப்படம் என்ற பெருமை அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துக்கு உண்டு. எம்ஜிஆர் நடித்த இந்தப் படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் டிஆர் சுந்தரம் இயக்கினார். அன்றைய நாட்களில் இந்தப் படத்தின் கேவா கலரை வியந்து பார்த்தது ரசிகர் கூட்டம். ஆண்டு: 1957.
முதல் பிஆர்ஓ
தமிழ் சினிமாவின் மக்கள் தொடர்பாளர் (பொதுஜனத் தொடர்பு) என்ற பணியை உருவாக்கியவர் எம்ஜிஆர். 1958-ல் அவரது நாடோடி மன்னன் படத்தின் மூலம் பிஆர்ஓவாக அறிமுகமானவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். இன்று நாம் இத்தனை புள்ளிவிவரங்களை எழுத தகவல் சேகரித்து வைத்திருக்கும் பெரும் சாதனையாளர்.
வீரபாண்டிய கட்டபொம்மன்
எகிப்தின் கெய்ரோ நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் நடிப்பு மற்றும் இசைக்காக இரு விருதுகளை வென்றது. அந்த விருதினைப் பெற நடிகர் சிவாஜி கணேசன் கெய்ரோவுக்குச் சென்றார். அவருக்கு எகிப்தின் அதிபர் நாசர் விருது வழங்கி சிறப்பித்தார். ஆண்டு: 1960.
முதல் வரிவிலக்கு
வ உ சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை வைத்து பிஆர் பந்துலு இயக்கிய கப்பலோட்டிய தமிழன்தான் முதல் முதலில் வரிவிலக்கு பெற்ற படம். சிவாஜி கணேசன் வஉசியாகவே வாழ்ந்த இந்தப் படம் 1961-ல் வெளியானது.
மற்ற 'முதல் சாதனைகள்' நாளைக்கு...
நன்றி: பிலிம் நியூஸ் ஆனந்தன்.