கார்த்தி படத்தில் நடித்த கிராமிய பாடகர் மரணம்: அதிர்ச்சியில் மனைவியும் உயிர் இழந்தார்
விருதுநகர்: பருத்திவீரன் படத்தில் நடித்த கிராமிய பாடகர் பாண்டி மரணம் அடைந்துள்ளார். அவர் இறந்த அதிர்ச்சியில் அவரது மனைவியும் இறந்துவிட்டார்.
கார்த்தி நடித்த பருத்திவீரன், மாட்டுத்தாவணி மற்றும் வெண்ணிலா கபடிக்குழு ஆகிய படங்களில் நடித்துள்ளவர் கிராமிய பாடகர் பாண்டி(55). விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியை சேர்ந்தவர்.

அப்பகுதியில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்ற பாண்டி நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தார் அவரை பல இடங்களில் தேடியபோது காரியாபட்டி நெடுங்குளம் செல்லும் வழியில் இருக்கும் பாலத்தின் அருகே அவர் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.
உடனே பாண்டியின் உடலை வீட்டிற்கு தூக்கி வந்தனர். பாண்டியின் உடலை பார்த்த அவரது மனைவி பச்சையம்மாள் கதறி அழுதபோது நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார்.
உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிர் இழந்தார். இதையடுத்து கணவன், மனைவியின் உடல்களை ஒன்றாக வைத்து எரியூட்டினர்.
பாண்டி, பச்சையம்மாள் மரணத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











