அட டுபாக்கூர்களா.. 'கொரோனா ஹீரோ' பெயரில் ஆன்லைன் மோசடி.. பிரபல நடிகர் அதிர்ச்சி.. போலீஸில் புகார்!
மும்பை: 'கொரோனா ஹீரோ' சோனு சூட் பெயரைச் சொல்லி ஆன்லைனில் மோசடி செய்துள்ள நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொரோனா காரணமாக, லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால், பல்வேறு பகுதிகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
பேருந்து, ரயில் உள்ளிட்ட போக்குவரத்துகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் அவர்களால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியவில்லை.

நடிகர் சோனு சூட்
அவர்களை தனது சொந்த செலவில், தனி பேருந்துகளை அமர்த்தியும் ரயில்களை ஏற்பாடு செய்தும் அனுப்பி வைத்தவர் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிக்கிக் கொண்ட பலரை, தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து குடும்பத்துடன் சேர்த்து வைத்து மகிழ்ந்தார்.

நீங்கள்தான் ஹீரோ
வெளிநாட்டில் சிக்கிய தமிழக மாணவர்களையும் விமானம் மூலம் அழைத்து வர உதவி செய்தார். அவருடைய, கணக்கில் அடங்காத உதவி, இந்தியா முழுவதும் பாராட்டப்பட்டது. படங்களில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் நீங்கள்தான் ஹீரோ என்றும் கொரோனா நாயகன் என்றும் கூறி வருகின்றனர். இதற்கிடையே உதவிகேட்டு இப்போதும் தனக்கு ஏராளமான அழைப்பு வந்து கொண்டிருப்பதாக அவர் கூறியிருந்தார்.

போலி ட்விட்டர்
கல்வி உதவி தொகை உள்ளிட்ட விஷயங்களில் தொடர்ந்து உதவி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், நெட்டிசன்களின் கேள்விக்கு பதிலளித்தும் கேட்பவர்களுக்கு உதவியும் செய்து வருகிறார். இந்நிலையில் சோனு சூட் என்ற பெயரில் போலி ட்விட்டர் கணக்கு உருவாக்கி, ஒரு நபர் மக்களை ஏமாற்றி வருவது தெரியவந்தது.

மோசடியை நிறுத்துங்கள்
இது சோனு சூட் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அந்த நபரை டேக் செய்து ட்வீட் செய்த சோனு சூட், 'அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்காக விரைவில் கைது செய்யப்படுவீர்கள். அதற்குள் மோசடியை நிறுத்துங்கள்' என்று கூறி இருந்தார். இந்நிலையில் அவர் பெயரில் மேலும் ஒரு மோசடி நடந்துள்ளது.

விஷால் லம்பா
இதுபற்றி சோனு சூட்டின் நண்பரும் நடிகருமான, விஷால் லம்பா மும்பை ஓஷிவாரா போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், சோனு சூட் மானேஜர் என்ற பெயரில் ஒருவருக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த போலி மானேஜர், சோனு சூட் உதவி செய்ய வேண்டும் என்றால் பிராஸசிங் கட்டணமாக ரூ.1,700 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

நம்ப வேண்டாம்
அவர் குறிப்பிட்டு இருந்த வங்கிக் கணக்கில் அவர் அதை செலுத்தினார். பின்னர் அவரிடம் இருந்து போன் அழைப்பு வரவில்லை, இந்த மோசடி பேர்வழியை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுபற்றி நடிகர் சோனு சூட் கூறும்போது, 'இதுபோன்று பல புகார்கள் வந்துள்ளன. இதுபோன்ற மோசடி நபர்களை நம்ப வேண்டாம் என்று சமூக வலைதளங்களில் நான் குறிப்பிட்டு வந்துள்ளேன்.

ஏமாற்ற வேண்டாம்
இப்படி மோசடி செய்பவர்களுக்கு பண உதவி தேவை என்றால் கூட, நல்ல வேலையை ஏற்பாடு செய்து தருகிறேன், இதுபோன்று யாரையும் ஏமாற்ற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளேன்' என்றார். ஓஷிவாரா போலீஸ் இன்ஸ்பெக்டர் தயானந்த் பங்கர் கூறும்போது, 'அந்த அடையாளம் தெரியாத மோசடி நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். விசாரித்து வருகிறோம் ஏன்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











