100 பேர்தான் படம் தயாரிக்கிறார்களா? ஆவேசமான தயாரிப்பாளர்கள்.. அதிரடியாக மன்னிப்புக்கேட்ட பிரபலம்!
சென்னை: தயாரிப்பாளர்கள் ஆவேசமாக வைத்த கோரிக்கையை அடுத்து பிரபல தயாரிப்பாளர் மன்னிப்புக் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஜூன் மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. லாக்டவுன் காரணமாக இந்த தேர்தல் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன், தனது யுடியூப் சேனலில் தயாரிப்பாளர்கள் பற்றி பேசியிருந்தார்.

எப்போதோ
அதில் தயாரிப்பாளர் சங்கத்தில் ஓட்டுரிமை உள்ள 1311 பேரில், சுமார் நூறு பேர் மட்டுமே தொடர்ந்து படங்களை தயாரித்து வருகின்றனர். மீதம் உள்ளவர்கள், எப்போதோ படம் தயாரித்து விட்டு இப்போதுவரை சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். இவர்களை, ஓட்டுக்காகச் சிலர் பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறியிருந்தார்.

ஏவிஎம் நிறுவனம்
இந்த வீடியோவை தயாரிப்பாளர்களின் வாட்சப் குரூப்பிலும் அவர் பதிவிட்டிருந்தார். இதை கேட்ட சில தயாரிப்பாளர்கள் ஆவேசம் அடைந்தனர். 'நூறு தயாரிப்பாளர்கள்தான் இப்போது படம் எடுக்கிறார்கள் என்று சொல்கிறீர்களே, ஏவிஎம் நிறுவனம் இப்போது படம் எடுக்கவில்லை, ஆர்.பி.சவுத்ரி இப்போது படம் தயாரிக்கவில்லை, இவர்களை எல்லாம் பழைய தயாரிப்பாளர்கள் என்று சொல்வீர்களா? என்று சிலர் ஆவேசமாகக் கேள்வி கேட்டனர்.

என்ன தெரியும்?
அவரது பேச்சை, சில தயாரிப்பாளர்கள் கடுமையாகக் கண்டித்தனர். 'நாங்கள் சொந்த வீட்டை, சொத்துக்களை விற்று, யாரிடமும் பைனான்ஸ் வாங்காமல் படம் எடுத்தவர்கள், தயாரிப்பாளர்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று கடுமையாகச் சாடினர். தயாரிப்பாளர் பழனிவேல், உடனடியாக இதற்கு மன்னிப்புக் கேட்கவில்லை என்றால், நிலைமை வேற மாதிரியாகும் என்று கூறியிருந்தார்.

மன்னிப்புக் கேட்கணும்
தயாரிப்பாளர்கள் சௌந்தர், விடியல் ராஜு, ரஞ்சித் குமார் உட்பட பலர் அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தனர். இதையடுத்து தயாரிப்பாளர் தனஞ்செயன் மன்னிப்புக் கேட்டார். அவர், தயாரிப்பாளர்களுக்கு வணக்கம். எந்த தவறான எண்ணத்திலும் சக தயாரிப்பாளரை காயப்படுத்த வேண்டும் என்று நான் பேசவில்லை.

நிபந்தனையற்ற
நான் சொன்னதும் உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாகக் கேள்விபட்டேன். அதனால் அந்த வீடியோவை நான் நீக்கிவிட்டேன். அதோடு நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். இந்த பிரச்னையை இதோடு முடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். இனி பேசும்போது கவனமாக பேசுவேன்' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











