இனி சினிமாவில் பாட மாட்டேன்.... இளைஞர்களுக்கு வழி விடுகிறேன்! - கானா பாலா
இனிமேல் சினிமாவில் பாடமாட்டேன். இளைஞர்களுக்கு வழிவிட்டு விலகுகிறேன் என்று பிரபல கானா பாலா அறிவித்துள்ளார்.
சினிமாவில் கானா பாடல்கள் பாடி பிரபலமானவர் கானா பாலா. அதற்கு முன்பே வட சென்னைப் பகுதிகளில் இவரது கானா பிரசித்தம்.

அனாதை பாலா
பிறகு படத்தில்தான் கானா பாலா முதன் முதலில் பாடகராக அறிமுகமானார். அதில் இவருக்குப் பெயர் அனாதை பாலா. இரு கானா பாடல்களைப் பாடியிருந்தார்.

அட்டகத்தி
அதன் பிறகு ஓரிரு படங்களில் பாடினாலும், அட்டகத்தி படத்தில்தான் இவர் கானா பாலாவாக பிரபலமானார். அதில் இடம்பெற்ற நடுக்கடலுல, ஆடிப் போனா ஆவணி.. பாடல்கள் பெரிய ஹிட்டடித்தன.

படு பிஸி
அதன் பிறகு 2013, 2014-ல் கானா பாலா பாடல் இடம்பெறாத படங்களே இல்லை எனும் அளவுக்கு பல படங்களில் பாடினார். சில படங்களில் நடித்தும் உள்ளார்.

எழுத்தும்...
தான் பாடிய பாடல்கள் பெரும்பாலானவற்றை தானே எழுதினார் கானா பாலா. ஆனால் 2016-க்குப் பிறகு சினிமாவில் பாடுவதை நிறுத்திவிட்டார் பாலா. அவர் கடைசியாகப் பாடியது உலகம் ஒருவனுக்கா... படம்: கபாலி.

விழிப்புணர்வுப் பாடல்கள்
இப்போது மக்களுக்கான விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடி வருகிறார் கானா பாலா. சமீபத்தில் போக்குவரத்து விதிகள் விழிப்புணர்வு குறித்து பாலா பாடிய பாடல் சிடி சென்னை போக்குவரத்து கமிஷனர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்ற கானா பாலா கூறுகையில், "எனக்கு போதுமான புகழ் கிடைத்துவிட்டது. இனி நான் சினிமாவில் பாட மாட்டேன். விழிப்புணர்வுப் பாடல்கள் மட்டுமே பாடுவேன்," என்றார்.

பிறந்த நாள் முடிவு
இதனை தனது பிறந்த நாள் முடிவாக எடுத்ததாக கானா பாலா தெரிவித்தார். 2007 முதல் 2016 வரை நூறுக்கும் அதிகமான பாடல்களை சினிமாவில் பாடியுள்ளார் கானா பாலா.


Click it and Unblock the Notifications











