காந்திஜியின் அஸ்தி திருட்டு….கவிதை எழுதி கண்டனம் செய்த கமல்
சென்னை: மத்திய பிரதேசத்தில் உள்ள பாபு பவன் என்ற பெயரில் ரேவாவில் இருக்கும் நினைவகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த காந்திஜியின் அஸ்தியை கொள்ளையர்கள் திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக காவல் துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை வடிவில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
வன்முறை நிறைந்த நம் நாட்டை அகிம்சை முறையில் எந்த ஒரு அடக்கு முறையோ அல்லது போராட்டமோ நடத்தாமல், சமாதானமாக இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டவர். சாதி, மத பேதங்களால் பிளவுபட்டு இருந்த நம் நாட்டினை ஒன்றிணைத்த அந்த மகான் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி.

இருப்பினும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்த, எதிரிகளும் ஆங்காங்கே முளைத்தார்கள். இதனையடுத்து 1948ஆம் ஆண்டு நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார் மகாத்மா காந்தி. இந்து மத வழக்கப்படி அவர் கொல்லப்பட்ட பிறகு, அவரின் அஸ்தி முழுவதுமாக நீர் நிலைகளில் கரைக்கப்படாமல், அவரின் ஒவ்வொரு நினைவகத்திற்கும் பிரித்து கொடுக்கப்பட்டு பத்திரப்படுத்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் காந்திஜியின் 150ஆவது பிறந்தநாள் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது மத்திய பிரதேசத்தில் உள்ள பாபு பவன் என்ற பெயரில் ரேவாவில் இருக்கும் நினைவகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த காந்திஜியின் அஸ்தியை கொள்ளையர்கள் திருடி சென்று விட்டனர்.
அதோடு, காந்திஜியின் புகைப்படத்தின் மீது துரோகி என்று கிறுக்கி விட்டு, அதை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். இது மிகவும் கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக காவல் துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நாடு முழுவழுதும் இந்த செயலுக்காக கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை வடிவில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
"எம் காந்தியின் திருநீற்றை களவுற்ற பக்தர்காள்
உம் நெத்தியில் பூசிடவைத்த அச்சாம்பலை ஏற்றதில் மகிழ்கிறோம்.
இன்னமும் உளது நீர் சுட்டதின் பிணக்குவியல்
கூடிடக்கூடிட
உம்பக்தியின் அடிநாதம் காந்தியின்
சாம்பலுடன் கைலாயமெய்தவே
கணக்கிலா இந்தியர்கள்
வழிகோலுகின்றோம்
வாழ்த்துடன்கூடியே
என்று கமல்ஹாசன் கவிதை வடிவில் பதிவு செய்ததன் அர்த்தம் புரியாமல் குழம்பிய ட்விட்டர்வாசிகளுக்கு, பிறகு தான் அந்த பதிவின் அர்த்தம் விளங்கியது. காந்திஜியின் அஸ்தியை திருடி அவரை அவதூறாக எழுதிய திருடர்களை கண்டிக்கும் வகையில், அந்த பதிவை பதிவிட்டுள்ளார் என்பது பிறகு தான் புரிந்தது. இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது கட்சியை தொடங்கிய நாள் முதல் சமூகத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும் அநீதிகளுக்கும் குரல் எழுப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











