கவுதம் மேனன் - அஜீத் கூட்டணியில் என்னை அறிந்தால் 2.. விரைவில்!
சென்னை: என்னை அறிந்தால் படத்தின் 2 வது பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற படம் என்னை அறிந்தால். அஜீத், த்ரிஷா, அனுஷ்கா மற்றும் அருண் விஜய் நடித்திருந்த இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது.

வெற்றி பெற்ற படங்களின் 2 வது பாகத்தை எடுக்க அனைவரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் கவுதம் மேனனும் அந்த வரிசையில் இணைந்திருக்கிறார்.
சமீபத்தில் கவுதம் மேனன் அளித்த பேட்டி ஒன்றில் என்னை அறிந்தால் படத்தின் 2 வது பாகத்தை விரைவில் எடுப்பேன் என்று உறுதி தெரிவித்திருக்கிறார்.
இப்படத்தின் கதை பாதி முடிந்த நிலையில் முழுக்கதையையும் எழுதி முடித்து விட்டு அஜீத்தை சந்திக்க அவர் திட்டமிட்டிருக்கிறார்.
கவுதம் மேனன் தற்போது அச்சம் என்பது மடமையடா படத்தை எடுத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தனது கனவுப் படமான துருவ நட்சத்திரத்தை ஜெயம் ரவியை வைத்து இயக்குகிறார்.
மேலே சொன்ன 2 படங்களையும் முடித்து விட்டு என்னை அறிந்தால் படத்தின் 2 வது பாகத்தினை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











