காத்திருக்கிறது ஒரு இசை விருந்து.. வழங்கப் போவது கெளதம் மேனன்.. முழங்கப் போவது இளையராஜா!
சென்னை: இசைஞானி இளையராஜாவின் நேர்காணல் ஒன்றை விஜய் டிவிக்காக இயக்குநர் கவுதம் மேனன் எடுத்துக் கொடுத்திருப்பது திரையுலகில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
சில கசப்பான அனுபவங்களினால் சமீப காலங்களில் இளையராஜா யாருக்கும் அவ்வளவு எளிதில் பேட்டிகள் கொடுப்பதில்லை.
நிலைமை இப்படியிருக்க ஒரு முழுநாளையும் ஒதுக்கி இளையராஜா பேட்டி கொடுத்தால் யாருக்குத் தான் ஆச்சரியம் ஏற்படாது.

இளையராஜா
இசைஞானியின் இசையமைப்பில் 1௦௦௦ மாவது படமாக சமீபத்தில் தாரை தப்பட்டை வெளியாகி அவரது ரசிகர்களைக்கவர்ந்தது. இந்நிலையில் சில காரணங்களால் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தும் திட்டத்தை இயக்குநர் பாலா கைவிட்டுவிட தற்போது விஜய் டிவி அதற்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகிறது. இந்த விழாவிற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் பிரமாண்டமாக பிப்ரவரி 27 ம் தேதி இந்த விழாவை விஜய் டிவி நடத்துகிறது.
இளையராஜா - கவுதம் மேனன்
இந்த விழாவை முன்னிட்டு இளையராஜாவின் நேர்காணல் ஒன்றை விஜய் டிவிக்காக இயக்குநர் கவுதம் மேனன் எடுத்துக் கொடுத்திருக்கிறார். ஊதா நிற முழுக்கை டீஷர்ட் மேல் கோட் அணிந்து கவுதம் மேனனும், வழக்கம் போல முழு வெள்ளை நிற உடையில் இளையராஜாவும் இந்த நேர்காணலில் பங்கு பெற்றுள்ளனர்.
7 மணிக்கு தொடங்கி
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த நேர்காணல் மாலை 5 மணிவரை நீண்டதாம். கடற்கரையில் நடந்து கொண்டே பேசிய இசைஞானி இசை குறித்து நிறைய சுவாரசியமான விஷயங்களை கவுதம் மேனனிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறாராம். இந்த நேர்காணல் கண்டிப்பாக இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு விருந்துதான் என்று உடனிருந்தவர்கள் கூறுகின்றனர்.

என்ன காரணம்
நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு இளையராஜா இசையமைத்த போது கவுதம் மேனன் இசைஞானியை நிறைய விஷயங்களில் பெருமைப்படுத்தியிருக்கிறார். பழைய நினைவுகளை மறக்காத இளையராஜா நேர்காணலை எடுக்க சம்மதம் சொன்னதுடன், ஒரு முழு நாளையும் கவுதம் மேனனிற்கு ஒதுக்கிக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











