தூங்கிட்டு வாங்கன்னு சொன்னது குத்தமா, பிழைப்பில் மண் போடுவது விமர்சனமா?: கெளதம் மேனன் கேள்வி
சென்னை: சிம்பு - கெளதம் மேனன் கூட்டணியில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.
படத்தின் ரிலீஸுக்கு முன்னர் முதல் காட்சி பார்க்க வருபவர்களை நன்றாக தூங்கிவிட்டு வருமாறு கெளதம் மேனன் கூறியிருந்தார்.
இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் சக்சஸ் மீட்டில், அதற்கு கெளதம் மேனன் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது கெளதம் மேனன் படமா?
வெந்து தணிந்தது காடு படம் மூலம் மூன்றாவது முறையாக சிம்பு, கெளதம் மேனன், ஏஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ளது. சிம்புவின் நடிப்பும், ஏஆர் ரஹ்மானின் இசையும் எந்தளவிற்கு பாராட்டைப் பெற்றுள்ளதோ, அதேபோல் கெளதம் மேனனையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். வழக்கமான கெளதம் மேனன் படங்களைப் போல இல்லாமல், திரைக்கதையிலும் மேக்கிங்கிலும் கெளதம் மேனன் மேஜிக் ரொம்பவே வித்தியாசமாக உள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வெற்றிவிழாவில் பேசிய கெளதம் மேனன்
வெந்து தணிந்தது காடு படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை கொண்டாடும் விதமாக, நேற்று சக்சஸ் மீட் நடத்தப்பட்டது. அதில், சிம்பு, கெளதம் மேனன், நீரஜ் மாதவ் உள்ளிட்ட வெந்து தணிந்தது காடு படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது வெந்து தணிந்தது காடு படம் குறித்தும், அது உருவானது பற்றியும் இயக்குநர் கெளதம் மேனன் பேசினார். படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னர், முதல் நாள் முதல் காட்சி பார்க்க விரும்பும் ரசிகர்கள், நன்றாக தூங்கிவிட்டு வாங்க என கெளதம் மேனன் கூறியிருந்தார். நேற்று அதற்கு விளக்கம் கொடுத்தார் கெளதம்.

இதுக்காக தான் அப்படி சொன்னேன்
இந்நிலையில், வெந்து தணிந்தது காடு சக்சஸ் மீட்டில் பேசிய கெளதம் மேனன், "படத்தின் கதை புரிய வேண்டும் என்பதால், பொதுவாக தான் நல்லா தூங்கிட்டு வர சொன்னேன். ஆனால், அதை இவ்ளோ பெரிதாக்கிவிட்டார்கள். என் மற்ற படங்களை விட வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்துள்ளன. விமர்சனங்களே தேவையில்லை எனச் சிந்தித்ததுண்டு. இன்னொருத்தர் பிழைப்பில் மண் அள்ளிப் போடுவது தான் விமர்சனம் எனச் சிந்தித்திருக்கிறேன்" எனக் கூறினார்.

வெந்து தணிந்தது காடு 2 கண்டிப்பாக வரும்
இந்த நிகழ்ச்சியில் கெளதம் மேனனை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசினார். அப்போது, "இந்தப் படம் ஹிட் இல்லை பம்பர் ஹிட் தயாரிப்பாளராக இதை நான் சொல்கிறேன். தமிழ்நாடு மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் நன்றாக ஒடிக் கொண்டிருக்கிறது. நான் நினைத்ததை விட அதிகமாகப் படம் வசூலித்துள்ளது படத்தின் பாத்திரமாகவே சிலம்பரசன் இருந்தார். அவரது நடிப்பை நான் ரசித்தேன்.இந்த நடிப்புக்கு அடுத்த வருடம் சிலம்பரசனுக்கு ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் அதற்கு அவர் தகுதியானவர். இது கெளதம் மேனன் படம் மாதிரி இல்லை, ஆனால் இந்த மாதிரியும் முடியும் என அவர் நிருபித்துவிட்டார். வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் நிச்சயம் உண்டு அதற்கான ஆயத்த பணிகளை ஜெய மோகனும் கெளதம் மேனனும் செய்து வருகிறார்கள் எனக் கூறினார். அந்தப் படத்தையும் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும். எனக் கூறிய ஐசரி கணேஷ் அது கமர்சியலாக இருக்கும் எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











