செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா.. தயாரிப்பாளர் கவுதம் மேனன்?
சென்னை: இயக்குநர் செல்வராகவனின் புதிய படத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க, படத்தை கவுதம் மேனன் தயாரிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா இவர் கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்திலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவனின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
செல்வராகவன் எழுதியிருக்கும் ஒரு திகில் கதையில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க, படத்தை கவுதம் மேனன் தயாரிப்பார் என்று கூறுகின்றனர்.
சிம்புவை வைத்து இயக்கி வந்த கான் திரைப்படத்தை பாதியில் நிறுத்தியபோது, தனுஷ் படத்திற்காகத் தான் இந்த மாதிரி செல்வராகவன் செய்தார் என்று பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டது.
ஆனால் தங்கமகன் படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ஈட்டாததால் தனது அடுத்தடுத்த படங்களில் தனுஷ் தற்போது அதிரடியாக பல மாற்றங்களை செய்து வருகிறாராம்.
இதனால் தனுஷை இயக்க செல்வராகவன் காத்திருக்கும் சூழல் தற்போது உருவாகி இருக்கிறது. இந்த இடைவெளியில் ஒரு படத்தை இயக்கலாம் என்று முடிவு செய்த செல்வராகவன் எஸ்.ஜே.சூர்யாவை நாயகனாக வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கும் திட்டத்திற்கு வந்திருக்கிறார்.
மேலும் இந்தப் படத்தை விரைவில் முடித்து விடவும் செல்வராகவன் திட்டமிட்டு இருக்கிறாராம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











