ஆதாரமில்லாமல் கமல் மீது குற்றம் சாட்டவில்லை - மல்லுக்கட்டும் கௌதமி!
Recommended Video

சென்னை : நடிகை கௌதமி, 'விஸ்வரூபம் மற்றும் 'தசாவதாரம்' படங்களில் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதற்கு தனக்கான சம்பளத்தை ராஜ்கமல் நிறுவனம் தரவில்லை என குற்றச்சாட்டை எழுப்பினார்.
கௌதமிக்கு சம்பள பாக்கி எதுவும் இல்லை. ராஜ்கமல் நிறுவனம் பணம் தரவேண்டியிருப்பதற்கான ஆதாரங்களை கௌதமி கொடுத்தால், நிச்சயம் பணம் தரத் தயாராகவே இருக்கிறோம். என பதில் அளித்தது ராஜ்கமல் ஃபிலிம்ஸ்.
இந்நிலையில், ஆதாரமில்லாமல் தான் கமல்ஹாசன் நிறுவனத்தின் மீது புகார் கூறவில்லை என நடிகை கௌதமி தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

கௌதமி
கமல்ஹாசனுடன் 13 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நடிகை கவுதமி, அதன் பின் அவருடனான உறவை ஒரு வருடத்திற்கு முன்பு முறித்துக்கொண்டார். இருவரும் சுமூகமாக பிரிந்து கொள்வதாக தெரிவித்தனர். அதன் பின் எந்தச் சிக்கலும் இல்லை.

கமல் மீது குற்றச்சாட்டு
இந்நிலையில் சமீபத்தில் 'விஸ்வரூபம் மற்றும் 'தசாவதாரம்' படங்களில் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதற்கு தனக்கான சம்பளத்தை ராஜ்கமல் நிறுவனம் தரவில்லை என்று திடீரென குற்றசாட்டை எழுப்பினார் கௌதமி.

விமர்சனம்
கமல் கட்சி ஆரம்பித்ததுமே அவர் மீதான இந்த குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் மீது சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனத்தை வைத்தனர். தனது படத்தில் பணிபுரிந்தவருக்கு சம்பளத்தை ஒழுங்காகக் கொடுக்காத கமல், எப்படி நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்ற போகிறார் எனக் கேட்டு வறுத்தெடுத்தனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் பதில்
கௌதமியின் குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் பதிலளித்துள்ளது. 'தசாவதாரம்' படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். 'விஸ்வரூபம்' படத் தயாரிப்பு பி.வி.பி சினிமாஸ் நிறுவனம். இந்தப் படங்களில் கௌதமிக்கு சம்பளப் பிரச்னை இருந்தால், அதற்கு ராஜ்கமல் பிலிம்ஸ் எந்தவிதத்தில் பொறுப்பேற்க முடியும்?

ஆதாரம் இருந்தால் தருகிறோம்
ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படங்களில், காஸ்ட்யூம் டிசைனராக கௌதமி பணியாற்றியதற்கான சம்பளத் தொகை அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்டது. மாறாக, ராஜ்கமல் நிறுவனம் பணம் தரவேண்டியிருப்பதற்கான ஆதாரங்களைக் கவுதமி கொடுத்தால், நிச்சயம் நாங்கள் பணம் தரத் தயாராகவே இருக்கிறோம்.

அரசியல் காரணம்
கமல்ஹாசன் புதிதாக அரசியல் கட்சி தொடங்கி வழி நடத்திவரும் இவ்வேளையில், இப்படியொரு பிரச்னையை கௌதமி எழுப்பியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது' என ராஜ்கமல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கௌதமி பதில்
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள கௌதமி, "ஆதாரமின்றி எந்த காரணமும் இல்லாமல் நான் யார் மீதும் புகார் கூறவில்லை. யாரிடமும் நான் எதுவும் எதிர்பார்க்கவில்லை. சம்பள பாக்கியை சம்பந்தப்பட்ட நிறுவனம் தந்தாலே போதும். உண்மை நிலையை அறியாமல் பேசுவது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது" என அவர் விளக்கம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











