போட்டுக் கொடுத்தால் ரூ. 2 லட்சம் பரிசு: ஞானவேல்ராஜா அதிரடி அறிவிப்பு
சென்னை: கேபிள் டிவியில் புதுப்படம் ஒளிபரப்புவது குறித்து தகவல் கொடுத்தால் ரூ. 1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பரிசு அளிக்கப்படும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விதார்த், பாரதி ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள குரங்கு பொம்மை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,

கேபிள் டிவி
தமிழகத்தில் 1,300 கேபிள் டிவிகள் உள்ளது. 996 கேபிள் டிவிகள் அரசு கேபிள் மூலம் செயல்படுகிறது. காற்று வெளியிடை படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் என்றால் சனிக்கிழமை இரவு கேபிள் டிவியில் வந்துவிடுகிறது.

தியேட்டர்
கேபிள் டிவிக்களால் மக்களுக்கு தியேட்டருக்கு வர வேண்டிய அவசியம் இல்லாமல் போன சூழலை நாம் எல்லாம் சேர்ந்து அரசோடு உழைத்து இந்த 10 வருஷமாக உருவாக்கி வைத்துள்ளோம்.

முதல்வர்
கேபிள் டிவி விஷயத்தில் கண்டிப்பான நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். சினிமா படமோ, பாடல்களோ, க்ளிப்பிங்ஸோ கேபிள் டிவியில் போடும் உரிமை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் யாருக்கும் தற்போது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பரிசு
கேபிள் டிவியில் புதுப் படங்களை பார்க்க வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம். புதுப்படங்கள் கேபிள் டிவியில் வந்தால் அது குறித்து நாங்கள் அளிக்கும் எண் அல்லது இமெயில் முகவரியில் புகார் தெரிவித்தால் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை சன்மானம் அளிக்கப்படும் என்றார் ஞானவேல் ராஜா.


Click it and Unblock the Notifications











