"சினிமா மாஃபியாக்களை ஒடுக்கத்தான் தேர்தலில் நிற்கிறேன்.." - ஞானவேல்ராஜா சூளுரை!
Recommended Video

சென்னை : தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ள கே.இ.ஞானவேல்ராஜா சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தனி அணி அமைத்துப் போட்டியிடுகிறார்.
இவரது அணியில் தலைவர் பதவிக்கு இவரும், துணைத்தலைவர் பதவிக்கு கே.ராஜன், செயலாளர் பதவிக்கு நேசமணி, துணைச் செயலாளர் பதவிக்கு ஸ்ரீராம், பொருளாளர் பதவிக்கு 'மெட்டி ஒலி' சித்திக் ஆகியோர் போட்டியிட இருக்கிறார்கள்.
ஞானவேல்ராஜா நேற்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து பேட்டி அளித்தார். அப்போது அவர் தேர்தலில் போட்டியிடுவது பற்றியும், சினிமாவில் நிலவும் பிரச்னைகள் குறித்தும் பேசினார்.

அசோக்குமார் தற்கொலை
"நண்பர் அசோக்குமாரின் தற்கொலை பொதுமக்களையே புரட்டிப்போட்ட ஒரு விஷயம். அவர் ஒரு மென்மையான மனிதர். அவர் இப்படியொரு முடிவு எடுப்பதற்கு ஒருசில காரணங்கள், நிர்பந்தங்கள் நடைபெற்றிருக்கிறது. அதனை அவர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமா மாபியா
ஒரு சில நபர்களின் கையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஒரு மாஃபியா போல் மாட்டிக் கொண்டிருக்கிறது. யார் படம் எடுக்க வேண்டும்? யாருக்கு விற்பனை செய்ய வேண்டும்? என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பதை இவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

வித்தைக்காரர்கள்
பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளை, ஐந்து கோடி ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்து, அதன் மூலம் ஐந்து கோடி ரூபாயை நஷ்டப்படுத்தி, அந்த ஐந்து கோடி ரூபாயையும் அவர்களிடமே வசூலிக்கும் வகையிலான திட்டத்தை செயல்படுத்தத் தெரிந்த வித்தைக்காரர்கள் அவர்கள்.

யார் படமாக இருந்தாலும்
முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படமாக இருந்தாலும் சரி, புதுமுக நடிகர்களின் படமாக இருந்தாலும் சரி அவர்கள் விரும்பினால், அதற்கு ஒரு பிரச்னையை உருவாக்கி புகார் தர வைத்து, அதற்கு பஞ்சாயத்து செய்து தயாரிப்பாளரையும், விநியோகஸ்தரையும் அசிங்கப்படுத்தி அவர்களின் படத்தால் அவர்கள் எல்லாவற்றையும் இழந்து தெருவுக்கு வரும் நிலைக்கு ஆளாக்கிவிடுவார்கள்.

தேர்தலில் நிற்பது இதற்காகத்தான்
நல்லவர்கள் மட்டுமே இடம்பெறவேண்டும் என்று நான் விரும்பும் அமைப்பில் இவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அங்கு செயல்படும் ஒரு சிலரின் சுயநலப்போக்கு தடுக்கப்பட்டு, சுதந்திரமாக வியாபாரம் செய்பவர்கள் வந்து செல்லும் இடமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று விரும்பியே விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் நிற்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார் ஞானவேல்ராஜா.


Click it and Unblock the Notifications











