விஷாலின் 'நடிப்பு திறமையை' கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.. தாக்குதல் சம்பவம் பற்றி ராதிகா கிண்டல்
சென்னை: விஷாலின் நடிப்பு திறமையை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று நடிகை ராதிகா சரத்குமார் கேலியாக தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு சரத்குமாரும், நாசரும் மோதிய நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி-விஷால் நடுவே போட்டியிருந்தது.
வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று, மதியம், திடீரென வாக்குச்சாவடிக்குள் இருந்து பதற்றமாக முகத்தை வைத்து வெளியே ஓடிவந்தார் விஷால். அவருடன் ஓடி வந்தவர்கள் சிலர், சரத் அணி தாக்கியதாக கூறினர். ஆனால் விஷாலோ, தாக்கியது யார் என்று சொல்ல மாட்டேன் என்று கூறியபடி கேரவனுக்குள் ஓடினார்.
நடிப்பதாக கருத்து
சமூக வலைத்தளங்களில் உடனடியாக விஷாலுக்கு எதிராக பலரும் கருத்து பதிவு செய்தனர். வாக்குகளை பெறுவதற்காக விஷால் வெளிப்படுத்திய நடிப்பு இது என்று அவர்கள் தெரிவித்தனர். சிலர், விஷால் அடி வாங்கினார் என்றால், அவர் படத்தில் பறந்து பறந்து அடிப்பதெல்லாம் டூப்தானா என்று கேலி செய்திருந்தனர்.
'கோ' பட பாணியில்
'கோ' திரைப்படத்தில் முதல்வராக வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு, குடிசைகள் எரிந்த பகுதிக்கு வில்லன் அஜ்மல் கதாப்பாத்திரம் சென்று உதவி செய்யும், அவரே ஆள் செட் செய்து அடிக்கவிடுவார். அதை பத்திரிகையாளரான ஜீவா கதாப்பாத்திரம் உண்மை என நம்பி மக்களிடம் அஜ்மலை பெரிய ஹீரோவாக சித்தரித்தரிக்கும். இந்த படத்தின் காட்சிகளை போட்டு சமூக வலைத்தளங்களில் விஷாலை வாரினர்.
ஆசீர்வாதம்
இந்நிலையில், ராதிகா சரத்குமாரிடம் இன்று டிவிட்டரில் உரையாடிய ஒருவர், விஷால் வாக்குகளை வாங்க நடித்தார்தானே என்ற அர்த்தத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ராதிகா, "அவரது நடிப்பு திறமையை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என்று கூறியுள்ளார்.
உண்மை தெரியும்
ராதிகாவிடம் பேசிய, மற்றொரு ரசிகர், கமல் மற்றும் சிவகுமார் பற்றி சரத்குமார் பொதுவெளியில் விமர்சனம் செய்தார். ஆனால் கமல் உங்களை பற்றியோ சரத்குமாரை பற்றியோ எதுவுமே சொல்லவில்லையே என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ராதிகா, "எங்களுக்கு உண்மை தெரியும்" என்று கமலை மறைமுகமாக சாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











