தேர்தல் முடிந்த பிறகு வரும் கவுண்டமணியின் 49 ஓ!
சென்னை: தேர்தலுக்கு முன்பே வந்து கலக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட கவுண்டமணியின் 49 ஓ, தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்து திரைக்கு வருகிறது.
எந்த வேட்பாளருக்கும் ஓட்டு இல்லை என்பதைக் குறிக்கும் நோட்டா-வின் இன்னொரு பெயர்தான் 49 ஓ.
இந்த பாராளுமன்றத் தேர்தலில் சில முன்னணி கட்சிகளை விட நோட்டாவுக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்தன. அந்தளவு மக்கள் வெறுத்துப் போய் வாக்களித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தை தேர்தல் தேதியான ஏப்ரல் 24-க்கு முன்பே இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டாலும், அவர்களால் வெளியிட முடியவில்லை.
இப்போது அனைத்து வேலைகளும் முடிந்து இம்மாத இறுதியில் திரைக்கு வர இருக்கிறது 49 ஓ.
இந்தப் படம் குறித்து இயக்குநர் ஆரோக்கியதாஸ் கூறுகையில், "தேர்தலுக்கு பிறகு மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நகைச்சுவையாக சொல்லும் படம் இது. அதனால் இப்போது வெளியாவதும் பொருத்தமானதுதான்.
கவுண்டமணியின் வழக்கமான கேலி - கிண்டல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 2 பாடல்களுக்கு அவர் நடனமும் ஆடியிருக்கிறார்.
'நாட்டில் மண்ணெண்ணை வாங்குவதுதான் கஷ்டம். எம்.எல்.ஏ. ஆவது சுலபம்' போன்ற நிறைய 'பஞ்ச்' வசனங்களை கவுண்டமணி பேசி நடித்து இருக்கிறார். படத்தில் அவர், விவசாயியாக வருகிறார். படப்பிடிப்பு பட்டுக்கோட்டை, ஜெயம்கொண்டம் பகுதிகளில் நடந்தது," என்றார்.
கவுண்டமணியுடன் திருமுருகன், பாலாசிங், மூணார் ரமேஷ், 'நான் கடவுள்' ராஜேந்திரன், சாம்ஸ், வைதேகி, விஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர்.
கே இசையமைத்துள்ளார். டாக்டர் எல்.சிவபாலன் தயாரிக்க, இணை தயாரிப்பு: மணிமாறன். இம்மாதம் இறுதியில் படம் திரைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications












