சிக்ஸரில் என்னை அசிங்கப்படுத்திட்டாங்க... வக்கீல் நோட்டீஸ் விட்ட கவுண்டமணி
Recommended Video
சென்னை: தன்னுடைய அனுமதி பெறாமல் தன்னுடைய வசனங்களையும் புகைப்படங்களையும் பயன்படுத்தியதற்காக சிக்ஸர் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, காமெடி நடிகர் கவுண்டமணி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நடிகர் கவுண்டமணி, காமெடி நடிகர்களிலேயே சற்று வித்தியாசமானவர். தன் திரைப்படங்களில் நடிப்பதோடு சரி. இதைத் தவிர வேறு பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ள விரும்பமாட்டார். அதை அவர் விரும்புவதும் கிடையாது. யாராவது மிகவும் நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் விரும்பி வேண்டிக்கொண்டால் மட்டுமே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதுண்டு.

இவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்தது முதல் இன்று வரையிலும் அதிகபட்சமாக 10 அல்லது 15 பொது நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொண்டிருப்பார். அட, இவ்வளவு ஏன், இவர் நடித்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கூட கலந்துகொண்டது கிடையாது.
பொது நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளாததற்கு சொல்லும் காரணம், நம்முடைய வேலை நடிப்பது மட்டுமே. அதை விட்டுவிட்டு, இந்த கடை திறப்பு விழா, காதணி விழான்னு அடிக்கடி போய்க்கிட்டு இருந்தா நம்மள ஒருத்தணும் மதிக்க மாட்டான் என்பது தான்.
இந்த கொள்கையை கவுண்டமணி இன்று வரையிலும் கடைபிடித்து வருகிறார். இதனால் தான் இன்றளவும் இவருடைய காமெடிக்கு இன்றைக்கும் மதிப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல், இவருடைய காமெடியை வைத்துத் தான் சமூக வலைதளங்கள் அனைத்தும் மீம்ஸ்கள் உருவாக்கி தெறிக்கவிடுகின்றன.
நிலைமை இவ்வாறு இருக்க, நடிகர் வைபவ் நடிப்பில் இன்று வெளியான சிக்ஸர் படத்தில் கவுண்டமணியை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 1991ஆம் ஆண்டில் நடிகர் பிரபு, குஷ்பு, கவுண்டமணி மூவரின் நடிப்பில் வெளியான சின்னத்தம்பி படத்தில், கவுண்டமணி மாலைக் கண் குறைபாடு உள்ளவராக நடித்திருந்தார். தற்போது நேற்று வெளியான சிக்ஸர் படத்தில் நாயகன் வைபவும் மாலைக் கண் குறைபாடு உள்ளவராக நடித்துள்ளது, தன்னை இழிவு படுத்துவதாக உள்ளது என்று மனம் வருந்தி உள்ளார்.
இதனையடுத்து, சிக்ஸர் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு கவுண்டமணியின் சார்பாக வழக்கறிஞர் கே.சசிகுமார் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் சிக்ஸர் படத்தில் கவுண்டமணியின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும், வசனங்களையும் பயன்படுத்தியதாகவும், அவரை இழிவுபடுத்தும்படியான வசனங்களும் அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிக்ஸர் படத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட அந்த காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், உடனடியாக பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதனை அவர்கள் செய்யாத பட்சத்தில், சிக்ஸர் படத்தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிக்ஸர் படத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட காட்சிகள், படத்திலிருந்து நீக்கப்படுமா என்பது பற்றியும், இந்த நோட்டீஸுக்கான விளக்கமும் கூடிய விரையில் தயாரிப்பாளர்களின் சார்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











