சின்னத்திரை படப்பிடிப்பு.. 50 சதவிகித தொழிலாளர்களைப் பயன்படுத்த 'பெப்சி' அமைப்பு கோரிக்கை!
சென்னை: தொழிற்சாலைகளுக்கு வழங்கியதுபோல சின்னத்திரை படப்பிடிப்புக்கும் 50 சதவிகித தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சுவாமிநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா லாக்டவுன் காரணமாக, முடக்கப்பட்டுள்ள தொழில்கள் மறுபடியும் முழு வேகத்துடன் எழுந்து நிற்க வேண்டும் என்று மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி ரூபாய்க்கான பல்வேறு உதவி திட்டங்களை அறிவித்துள்ளது.
அதில் திரைப்படத்துறைக்கு எந்த சலுகைகளும் இல்லை. திரைப்படத்துறைக்கும் உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். சின்னத்திரை படப்பிடிப்பை தொடங்க அனுமதித்த தமிழக முதலமைச்சருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நன்றி. அனைத்துத் தொழிற்சாலைகளும் 50 சதவிகித பணியாளர்களை வைத்து தொடங்கலாம் என்று அரசு சில தளர்வுகளை வழங்கியுள்ளது.
ஆனால், சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 உறுப்பினர்கள்தான் என நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 150-லிருந்து 200 தொழிலாளர்கள் பணிபுரியக் கூடிய இடத்தில் 20 தொழிலாளர்களை கொண்டு பணிபுரிவது இயலாத காரியம்.
சின்னத்திரை டி.வி சீரியல்களில் 10-ல் இருந்து 20 நடிகர், நடிகைகள் இருப்பார்கள். உதவியாளர்கள் 10 பேர் இருப்பார்கள். நடிகர், நடிகைகளே 25 பேர் இருப்பார்கள். தொழிலாளர்களை எவ்வளவு குறைத்தாலும் 35-ல் இருந்து 40 தொழிலாளர்கள் இருப்பார்கள். எனவே குறைந்த பட்சம் 60 பேர் கொண்ட குழுவுடன் தொடங்கினால்தான் சின்னத்திரை தொடரின் படப்பிடிப்பு நடித்த முடியும்.
தொழிற்சாலைகளுக்கு வழங்கியது போல 50 சதவிகித தொழிலாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications