ரஜினி, விஜய் அரசியல்... மக்கள்தான் தீர்மானிப்பார்கள்! - கௌதமியின் பதில் இது
ரஜினி, விஜய் என யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களின் அரசியலை மக்கள்தான் தீர்மானிப்பார்கள் என்றார் நடிகை கௌதமி.
கமல் ஹாஸனை விட்டுப் பிரிந்த கௌதமி, இப்போது சமூக சேவைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். அவ்வப்போது அரசியலும் பேசி வருகிறார்.

பெண்கள் மீதான வன்கொடுமை
கரூர் ரோட்டரி சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கௌதமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சமூகத்தில் பெண்கள் தைரியமாக மற்றும் சுய நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அந்த காலத்தில் இருந்தது போல நவீன காலத்திலும் தொடர்ந்து வருகிறது. தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் மீடியாக்கள் மூலம் பெண்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆண்களும் அக்கறையோடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும்.

ஜெயலலிதா
கடந்த 2016ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலின் போது முதல்வராக பொறுப்பேற்ற மறைந்த முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்காக பல நல்ல திட்டங்களை அறிவித்தார். அவர் கொண்டு வந்த பெண்களுக்கான திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

புற்று நோய்
மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களிடம் போதிய அளவு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எனது பங்குக்கு நானும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். புற்றுநோய் குறித்து நகர்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் கிராமப்புறங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

விவசாயிகள் பிரச்சினை
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்தால் தான் அன்றாடம் நமது தேவை பூர்த்தியாகிறது. விவசாயிகளையும், கிராமங்களையும் காப்பாற்ற வேண்டும். விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. சமுதாயத்தில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது.
நகர்ப்புறங்களில் இருப்பது போல கிராமப் புறங்களிலும் அனைத்து வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ரஜினி
ரஜினி, விஜய் என யாரும் அரசியலுக்கு வரலாம். யார் அரசியலுக்கு வந்தாலும் அதனை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்," என்றார்.


Click it and Unblock the Notifications











