'சார்ஜ்ஷீட்' நகலைப் பெற்றார் கிரகலட்சுமி

நடிகர் பிரசாந்துக்கும், கிரகலட்சுமிக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கிரகலட்சுமிக்கும், வேணு பிரசாத்துக்கும் கல்யாணம் நடந்து விட்டதாகவும், அதை மறைத்து தன்னை கிரகலட்சுமி கல்யாணம் செய்து கொண்டதாக பிரசாந்த் பரபரப்பு புகாரைக் கூறினார்.
இதனால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்ப்பட்டது. இதைத் தொடர்ந்து கிரகலட்சுமி, அவரது தந்தை தனசேகரன், தாய் சிவகாமசுந்தரி, பணம் கேட்டு மிரட்டிய அவரது அண்ணன்கள் நாகராஜன், பொன்குமரன், அண்ணி அபிராமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் அருணாசலம், இது குறித்து பாண்டி பஜார் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதன்படி போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்தனர். இதற்கிடையில் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால் இந்த வழக்கு மீதான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கிரகலட்சுமி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் கிரகலட்சுமியின் மனுவை மாஜிஸ்திரேட் அருணாசலம் தள்ளுபடி செய்ததுடன், குற்றப்பத்திரிகை நகலை நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ள உத்தரவிட்டார்.
இதன்படி கிரகலட்சுமி தனது தந்தையை தவிர மற்றவர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. கிரகலட்சுமியின் தந்தையின் குற்றப்பத்திரிகை நகலை அவரது வழக்கறிஞர் பெற்றுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











