ரொம்ப கஷ்டப்பட்டு மொக்கை படம் எடுத்திருக்காங்க.. அய்யோ டீசல் படத்தை ப்ளூ சட்டை மாறன் விளாசிட்டாரே
சென்னை: இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கியிருக்கும் டீசல் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதற்கு முன்பு அவர் நடித்திருந்த லப்பர் பந்து, பார்க்கிங் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தன. தற்போது வந்திருக்கும் டீசல் படமோ சுமாரான வரவேற்பையே பெற்றிருக்கிறது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் படத்தை வைத்து செய்துவிட்டார்.
ஹரிஷ் கல்யாண் கோலிவுட்டில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். 2010ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்திலேயே அவர் அறிமுகமாகி தொடர்ந்து நடித்துவந்தாலும் அவருக்கு பெரிய திருப்புமுனை எதுவும் கிடைக்காமல் இருந்தது. பியார் பிரேமா காதல், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வரிசையாக இரண்டு ஹிட்டுகள்: இப்படிப்பட்ட சூழலில்தான் அவர் பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய படங்களில் நடித்திருந்தார். அந்த இரண்டு படங்களுமே நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றன. பார்க்கிங் படத்தின் இயக்குநரும், அதில் நடித்ததற்காக எம்.எஸ்.பாஸ்கரும் தேசிய விருது வென்றார்கள். லப்பர் பந்து படமோ கமர்ஷியல் ரீதியாக ஹிட்டடித்து அனைவரிடமும் பாராட்டை பெற்றது.

டீசல்: இப்படிப்பட்ட சூழலில் இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் டீசல் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். மேலும் காளி வெங்கட், ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா என பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநருக்கு இதுதான் முதல் படம். பைசன், டியூட் ஆகிய இரண்டு படங்களுக்கு போட்டியாக நேற்று களமிறக்கப்பட்டது.
சுமாரான வரவேற்புதான்: ஆயில் மாஃபியா என்ற புதுமையான ஒன்லைனை வைத்து கதையை செய்திருந்தார் இயக்குநர். நல்ல அட்டெம்ப்ட்டாக இது கருதப்பட்டாலும் மேக்கிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்து. விமர்சன ரீதியாக சுமாரான ரிசப்ஷனை பெற்ற படம் வசூலிலும் டல் அடிக்கவே செய்திருக்கிறது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்தப் படத்துக்கு தன்னுடைய விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: அவர் தனது விமர்சனத்தில், 'வடசென்னையில் குருடாயில் திருடும் உண்மை சம்பவத்தை வைத்து இந்தப் படத்தை இயக்குநர் எடுத்திருக்கிறார். ஒரு படம் ஆரம்பித்த 20 நிமிடங்களிலேயே ஆடியன்ஸை கவர்ந்துவிட வேண்டும். இதில் அப்படி எதுவும் இல்லை. இதில் உலக அரசியல் எல்லாம் பேசுகிறார்கள். 2 கோடி லிட்டர் ஆயிலை குட்டி யானையில் வைத்து ஹீரோ கடத்துகிறார் இதெல்லாம் நம்பும்படி இல்லை.
எல்லோருக்கும் 8 பக்க வசனம்: படத்தில் ஏகப்பட்ட பேரை இயக்குநர் நடிக்க வைத்திருக்கிறார். படம் முழுக்க யாராவது வந்துகொண்டே இருக்கிறார்கள். வருபவர்கள் சும்மா இல்லாமல் ஆளாளுக்கு எட்டு பக்க வசனங்களை பேசி கொல்கிறார்கள். நிறைய செலவு பண்ணியிருக்கிறார்கள். படத்துக்காக ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால் கஷ்டப்பட்டு மொக்கை படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்" என்று விளாசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











