Diesel: அவ்ளோதான் முடிச்சிவிட்டீங்க போங்க.. டீசல் படத்தை கழுவி ஊற்றிய செய்யாறு பாலு!
சென்னை: சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ள திரைப்படம் 'டீசல்'. இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். மேலும், வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின கதேகர், ஜாகிர் உசேன், தங்கதுரை, மாறன், கே.பி.ஒய் தீனா, அபூர்வா சிங் என பல நட்சத்திரங்க நடித்துள்ளனர். இப்படம் குறித்து செய்யாறு பாலுவின் விமர்சனத்தை பார்க்கலாம்.
வடசென்னையில் உள்ள ஒரு மீனவர் கிராமத்தில் 17 கிலோ மீட்டருக்கு கச்சா எண்ணெய் குழாய்யை மத்திய அரசு பதிக்கிறது. இதனால், அந்த மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், ஆத்திரப்படும் சாய்குமார், அந்தக் குழாயில் இருந்து கச்சா எண்ணையை திருடி மும்பைக்கு அனுப்புகிறார். அங்கு இந்த கச்சா எண்ணெயிலிருந்து தார்,டீசல், பெட்ரோல் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு மீண்டும், டீசல், பெட்ரோல் சென்னைக்கு வருகிறது.

டீசல் படத்தின் கதை: அந்த டீசல் மற்றும் பெட்ரோலை சாய் குமார், பெட்ரோல் பங்கில் கலப்படமே இல்லாத பெட்ரோல் மற்றும் டீசலாக விற்கிறார். கதை இப்படி சென்று கொண்டு இருக்க, வட சென்னை பகுதியில் துறைமுகம் கட்ட சாய் குமாரின் உதவியை கேட்கிறார் கார்பொரேட் முதலாளியான பதான். சாய் குமார் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி மறுத்துவிடுகிறார். ஆனால், அந்த கார்பொரேட் முதலாளி, அரசியல்வாதியின் உதவியுடன் சாய் குமாரை சிறையில் தள்ளிவிட்டு, துறைமுகத்தை கட்டுகின்றனர். இந்த நேரத்தில், சாய் குமாரின் வளர்ப்பு மகனான ஹரிஷ் கல்யாண் போலீஸ் கமிஷனரை அடித்து விட்டு தலைமறைவாகிறார். கார்பொரேட் நிறுவனம் அந்த பகுதியில் துறைமுகம் கட்டியதா ... சாய் குமார் சிறையில் இருந்து வெளியில் வந்தாரா... ஹரிஷ் கல்யாண் எங்கே சென்றார்.. என கேள்விகளுடன் டீசல் படத்தின் கதை நகர்கிறது.
குழப்பான கதை: படத்திற்கு டீசல் என பெயர் வைத்ததும் எண்ணெய் வளங்கள் குறித்து பேசும் திரைப்படமாக, இத்திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தை பார்க்கும் போது எண்ணை திருட்டு தொடர்பான கதையா? எண்ணை ஊழல் தொடர்பான கதையா? என பலவிதமான குழப்பங்கள் கதை செல்கிறது. அதாவது, ஒரு சட்டிக்குள் புளி சாதம், தயிர் சாதம், குழம்பு என அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து கிண்டினால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு குழப்பமாக இருந்தது டீசல் படத்தின் கதை.
கோட்டை விட்ட இயக்குநர்: நல்ல கதையை தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு அதன் திரை கதையை சரியாக அமைக்க தெரியாமல் குழம்பி இருக்கிறார். படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள் ஆனால் அவரவர்களுக்கான கதாபாத்திரம் சரியாக கொடுக்காமல் கோட்டை விட்டுள்ளார். பல இடத்தில் லாஜிக்கே இல்லாமல் பல காட்சிகள் வருகின்றன. அதுமட்டுமில்லாமல், ஹரிஷ் கல்யாண் பல இடத்தில் பேசிக்கொண்டே இருக்கிறார். இது படம் பார்ப்பவர்களை கடுப்பாக்கி படம் எதை நோக்கி சொல்கிறது என்றே தெரியாமல் போய், கடைசியில் படம் எப்போது முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது என செய்யாறு பாலு தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











