பொய் சொன்னால் ஊஊஊஊ: சொல்வது ஜோக்கர் குரு சோமசுந்தரம்
சென்னை: இப்போது எல்லாம் பொய் சொல்வது என்பது பொங்கல் சாப்பிடுவது போல ஜஸ்ட் லைக் தட் விஷயம் ஆகிவிட்டது . இந்நிலையில் தான் ஜோக்கர் பட புகழ் குரு சோமசுந்தரம் நடித்துள்ள ஒரு பொய் என்ற குறும்படம் வெளியாகியுள்ளது.
ஒரு வேலை இந்த பொய் ஒரு நோயாக மாறினால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை இந்த குறும்படம் சொல்கிறது.

இந்த உலகத்தில் பொய் நோய் என்ற ஒரு வகையான வித்தியாசமான நோய் பரவத் தொடங்கியது. அந்த நோயின் விளைவு, யாராவது ஒரு பொய் சொன்னால் மூளை சாவு ஏற்பட்டு இறந்துவிடுவார்கள். இதை எப்படி குணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு இளைஞன் அதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்கிறான். ஆனால் அவன் சகோதரனுக்கு அதில் உடன்பாடு இல்லை. அவனுடைய ஆராய்ச்சியின் முடிவில் ஒரு சின்ன கருவியை தயாரிக்கிறான்.
இவனுடைய அனைத்து ஆராய்ச்சியையும், சர்வதேச ஆராய்ச்சி மையத்தில் அளித்தபொழுது, அதை ஏற்க மறுக்கின்றார்கள். ஏனெனில் அந்த ஆராய்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு இல்லை என்று. முடிவில் அவனுக்கு என்ன நேர்ந்தது மற்றும் அந்த கருவி என்ன ஆயிற்று என்ற கேள்விகளுக்கு விடை தரும் குறும்படமே ஒரு பொய்.
கமல கண்ணன், இந்த ஒரு பொய் எனும் அறிவியல் புனைவை ஒரு ஹைக்கூவாக எழுதி, தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரமாக விளங்கும் உமாபதி, தனது வித்தியாசமான நடிப்பினால், பொய் நோய் ஒன்று இந்த உலகத்திற்கு நிஜமாகவே வரலாம் என்ற ஐயத்தை நம் மனதில் ஆழமாக பதிக்க முயன்றிருக்கிறார்.
மற்றோரு கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பவர் நமக்கு மிகவும் பரிட்சயமான ஜோக்கர், குற்றமே தண்டனை, ஆரண்ய காண்டம் மற்றும் பல படங்களில் நடித்த குரு சோமசுந்தரம். இந்த பொய் என்னும் ஒரு அழகான ஓவியத்தில் ஒரு தூரிகையாக மாறி தனது தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கேமரா கொண்டு நம்மை பொய் நோயின் உலகத்திற்கு ஒரு குட்டி பயணம் மேற்கொள்ள வைக்கிறார் கிரிதரன். அஸ்வத் மற்றும் அஜயின் இசை வண்ணத்தில் இந்த பொய் ஒரு அழகான கவிதையாய் ஒளிர்கிறது.
மொத்தத்தில் இந்த பொய் ஒரு விதமான தாக்கத்தை நம் மனதில் விதைத்து செல்கிறது.


Click it and Unblock the Notifications











