மாதவன் மீதான கால்வாய் ஆக்கிரமிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது!
மதுரை: நடிகர் மாதவன் மீதான கால்வாய் ஆக்கிரமிப்பு வழக்கில், அவர் மீது தவறில்லை என்று நிரூபிக்கப்பட்டதால் முடித்து வைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், "பாலசமுத்திரம் பகுதியில் உள்ள கால்வாயை ஒட்டி உள்ள 4 ஏக்கர் 88 சென்டு நிலத்தை நடிகர் மாதவன் விலைக்கு வாங்கி உள்ளார். நடிகர் மாதவன் கால்வாயின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளார்," என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது பழனி தாசில்தார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், "பட்டா நிலத்துக்குள் தான் கால்வாய் செல்கிறது. இதன்மூலம் நடிகர் மாதவன் கால்வாயை ஆக்கிரமித்துள்ளார் என்ற கேள்வியே எழவில்லை," என்று கூறப்பட்டிருந்தது.
நடிகர் மாதவன் தாக்கல் செய்த பதில் மனுவில், "புறம்போக்கு இடத்தில் உள்ள கால்வாய் எதையும் ஆக்கிரமிக்கவில்லை. தண்ணீர் சீராக செல்வதற்கு வசதியாக எனது இடத்துக்குள் இருந்த கால்வாயை சரி செய்து வேலி அமைத்துக் கொடுத்துள்ளோம்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் நூட்டி ராமமோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், கால்வாய் ஆக்கிரமிப்பு எதுவும் இல்லை என்று தாசில்தார் தெரிவித்திருப்பதால் நடிகர் மாதவன் மீதான மனு முடித்து வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.


Click it and Unblock the Notifications











