என்னதான்யா நடக்குது... போலீஸ் முன் ஆஜராக சிம்புவுக்கு ஜன 29-ம் தேதி வரை கெடு!
கிராமத்திலோ நகரத்திலோ... ஒரு சிறு குற்றம் செய்தாலும் போதும்... சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யாமல் விடாது போலீஸ். அதுவும் கோர்ட், வழக்கு என்று வந்துவிட்டால், எந்த மலை அல்லது மடுவில் ஒளிந்திருந்தாலும் பிடித்துவந்து அடைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள்.
ஆனால் சஞ்சய் தத், சல்மான் கான், சிம்பு மாதிரி விஐபிகள் விஷயத்திலோ போலீசும் நீதிமன்றங்களும் நடந்து கொள்ளும் விதம் மக்களின் நம்பிக்கைகளைத் தகர்ப்பது மாதிரிதான் இருக்கிறது.
நடிகர் சிம்புவும் அனிருத்தும் திட்டமிட்டு உருவாக்கிய பாடல்தான் பீப் பாட்டு என்கிற அசிங்கம். பெண்கள் என்றல்ல... நாகரிக சமுதாயத்தில் பிறந்த அத்தனை பேரின் கண்டனத்துக்கும் உள்ளான கருமம் அது.

கோவை மற்றும் சென்னை போலீசார் சிம்பு, அனிருத் மீது வழக்குகள் பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அனிருத் சென்னைக்கே வராமல் கனடாவில் தங்கிவிட்டார்.
சிம்புவின் மனுவை விசாரித்த நீதிபதி சிம்பு மீது போடப்பட்டிருக்கும் சட்டப் பிரிவுகளுக்கு முன் ஜாமீன் தேவையில்லை என்றும், அவை ஜாமீனில் வெளிவரக் கூடிய சட்டப் பிரிவு என்பதால், சம்பந்தப்பட்ட கோர்ட்டை அணுகி அவர் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். மேலும், சிம்பு ஜனவரி 11-ந்தேதி அன்று விசாரணைக்காக சென்னை போலீசில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
சிம்பு மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே கமிஷனர் அலுவலகத்தில் இன்று சிம்பு ஆஜராவாரா? என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், போலீசில் ஆஜராக அவகாசம் கேட்டு உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை சிம்பு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வரும் ஜனவரி 29 -ம் தேதி வரை போலீஸ் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து சிம்புவுக்கு விலக்களித்து உத்தரவிட்டுள்ளார்.
சிம்பு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.
'ஜட்ஜய்யா... என்னால் நிரந்தரமாகவே விசாரணைக்கு ஆஜராக முடியாது. எனவே தயவு செய்து வழக்கை தள்ளுபடி செய்யுங்கள்' என்று ஒரு மனுவைப் போட வேண்டியதுதான்.


Click it and Unblock the Notifications











