கபாலி பாடல் வரிகளை நீக்க வேண்டுமா? - உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
மதுரை: கபாலி படத்தின் பாடல் ஒன்றின் வரிகளை நீக்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை திருநகரை சேர்ந்த ஒருவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள கபாலி படத்தில் கபிலன் எழுதிய 'உலகம் ஒருவனுக்கா...' என்று தொடங்கும் பாடலின் இடையே வரும் சில வரிகள் சாதி ரீதியாகவும், குறிப்பிட்ட சிலரை புண்படுத்தும் வகையிலும் எழுதப்பட்டுள்ளன.

இதுபற்றி சமூக வலைதளங்களில் கருத்து மோதல்கள், தேவையற்ற விவாதங்கள் நடந்து வருவதுடன் வதந்திகளையும் பரப்புகிறார்கள்.
எனவே சர்ச்சைக்குரிய அந்த வரிகளை நீக்க வேண்டும், என்று திருநகர் போலீசில் புகார் மனு கொடுத்தேன். ஆனால் எனது மனு மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட்டு, கபாலி படத்தின் பாடலில் இடம் பெற்றுள்ள சர்ச்சை வரிகளை நீக்கும்படி உத்தரவிட வேண்டும்," என்று கோரியிருந்தார்.
'கலகம் செய்து ஆண்டையரின் கதை முடிப்பான்' என்ற வரியை நீக்க வேண்டும் என்பது இந்த நபரின் கோரிக்கை.
இந்த மனு நேற்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











