காலா படத்துக்கு தடையில்லை... உயர் நீதிமன்றம் உத்தரவு
காலா படம் ரிலீசாவதற்கு எந்த தடையும் இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

சென்னை: ரஜினியின் காலா திரைப்படத்துக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பா.ரஞ்சில் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. மும்பை தாராவியில் வாழும் தமிழர்களை பற்றிய இந்த படத்தில், காலா சேட்டு என்ற பாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார்.

மும்மை தாராவியில் வாழ்ந்த நெல்லை தமிழர் திரவியம் நாடாரின் கதையை திரித்து, காலா படத்தை எடுத்துள்ளதாக நாடார் சமுதாயத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். திரவியம் நாடாரின் புகழுக்கு கலங்கும் விளைவிக்கும் வகையில் படம் எடுக்கப்பட்டிருப்பதால், காலாவை தடை செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் முத்து ரமேஷ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் சொல்வது போல் காலா படம் திரவியம் நாடாரின் கதை இல்லை என தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட முத்து ரமேஷ் தரப்பு வழக்கறிஞர், டிரெய்லரில் வரும் காட்சி திரவியம் நாடாரின் வாழ்க்கையை தான் காட்டுவதாகக் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "படத்தை பார்க்காமலேயே எப்படி நீங்கள் ஒரு தீர்மானத்துக்கு வந்தீர்கள். வழக்கு தொடர்வதற்கு திரவியம் நாடாரின் குடும்பத்தினர் உங்களுக்கு அனுமதி கடிதம் வழங்கி இருக்கிறார்களா?" என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
பின்னர் காலா படத்துக்கு தடைவிதிக்க முடியாது எனக் கூறி இடைக்கால உத்தரவு பிறப்பித்து, வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், காலா படம் நாளை வெளியாவதில் இருந்த சிக்கல் விலகியுள்ளது.


Click it and Unblock the Notifications











