பேய் மழை.. வெள்ளக்காடு: காத்தாடும் தியேட்டர்கள்!
கடந்த இரண்டு வாரங்களாகப் பெய்து வரும் பெரு மழையால் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது தமிழ் திரையுலகம். சென்னைதான் என்றல்ல, தமிழகத்தில் பல பகுதிகளில் தியேட்டர்கள் காத்து வாங்கிக் கொண்டிருக்கின்றன கடந்த இரு வாரங்களாய்.
தீபாவளிக்கு ரிலீசான வேதாளம் மற்றும தூங்காவனம் படங்களுக்கு சென்னையில் மல்டிப்ளெக்ஸ்களில் மட்டும்தான் ஓரளவு கூட்டமிருந்தது. ஆனால் பெரும் மழை பெய்த நாட்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் வெள்ளத்துக்குப் பயந்து மக்கள் படம் பார்க்க வரவே இல்லை.

குறிப்பாக நேற்று வாகனங்களில் சென்னைக்குள் சென்ற மக்கள் நரக வேதனையை அனுபவித்தனர்.
புறநகர் பகுதிகளில் பல திரையரங்குகள் முன்னால் வெள்ளம் ஆறுபோல ஓடிக் கொண்டிருந்ததால் படம் பார்க்க உள்ளே வரும் எண்ணத்தையே மாற்றிக் கொண்டனர் பலரும்.
திருச்சி, தஞ்சை, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இங்கெல்லாம் திரையரங்குகளில் சொற்பமான ரசிகர்களே படம் பார்த்தனர்.
இந்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட படம் கமல் ஹாஸனின் தூங்காவனம், சமீபத்தில் வெளியான ஒரு நாள் இரவில் மற்றும் ஜேம்ஸ்பாண்ட் படமான ஸ்பெக்டர்.
வேதாளம் திரையிட்ட பல அரங்குகளில் கூட்டமே இல்லை.
ஸ்பெக்டர் படத்துக்கு குறிப்பிட்ட சில மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் கணிசமான கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக ஐமேக்ஸில். அந்த அகன்ற திரையில் படம் பார்க்கும் அனுபவத்துக்காகவே பெரும் தொகையைச் செலவழித்து, மழையையும் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் வந்தனர். ஆனால் மற்ற அரங்குகளுக்கு இந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை!


Click it and Unblock the Notifications











