தொடரும் போராட்டங்கள்.... ரஜினிகாந்த் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
சென்னை: ரஜினியின் பேச்சைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடுபிடித்து, போராட்டம், ஆர்ப்பாட்டம் எனத் திரும்பியுள்ளதால், ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தொடர்ந்து 5 நாட்களாக ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், நேற்றும் விடுபட்ட சில ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். ரசிகர்கள் சந்திப்பின்போது அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்து பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார். தேர்தல் நெருங்கும் நேரம் அரசியலில் இறங்கி தமிழக மக்களுக்கு நல்லது செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரது அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவு, எதிர்ப்புக் கருத்துகள் தினமும் வெளியாகி வருகின்றன. மீடியா முழுவதும் ரஜினி அரசியல் குறித்த செய்திகளும் அலசல்களுமே பிரதான இடத்தைப் பிடித்துள்ள நிலையில், தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பைச் சேர்ந்த வீரலட்சுமி என்பவர் நேற்று ரஜினிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு போன்ற நடவடிக்கையில் இறங்கி கைதானார். இன்று பதிலுக்கு ரஜினி ரசிகர்கள் களத்தில் இறங்கி சீமான், வீரலட்சுமி படங்கள், உருவ பொம்மைகளை எரித்து கைதாகினர்.
இந்த நிலையில் மீண்டும் சிலர் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தகவல் வெளியானதால், ரஜினி வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகனங்கள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. நிலைமை சீராகும் வரை போலீஸ் பாதுகாப்பு தொடரும் என காவல் துறை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











