ரோபோ சங்கர் ஒருநாள் லைஃப் ஸ்டைல் தெரியுமா?.. எப்படி வாழ்ந்திருக்காரு பாருங்க.. அப்படி இருந்தும் இப்படியா?
சென்னை: ரோபோ சங்கர் உடல்நல குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் நேற்று நடைபெற்றன. இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவியான பிரியங்கா நடனம் ஆடி தனது கணவரை அனுப்பி வைத்தார். சங்கரின் உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில் அவரது லைஃப் ஸ்டைல் குறித்து தெரியவந்திருக்கிறது.
கோலிவுட்டில் பன்முக திறமைகளை கொண்டவர் ரோபோ சங்கர். நடனம், மிமிக்ரி, காமெடி என அத்தனை ஏரியாக்களிலும் புகுந்து விளையாடிய அவர்; தனுஷ் நடித்த மாரி படத்தில் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது திறமையை அசால்ட்டாக வெளிப்படுத்தி அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்றார். இதனால் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத காமெடி மற்றும் குணசித்திர நடிகராக வலம் வர ஆரம்பித்தார்.
ஓவர் குடி: சூழல் இப்படி இருக்க அதீதமாக மது குடித்ததால் கடந்த வருடத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. குடும்பத்தினரும், நண்பர்களும் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை துணையோடு மீட்டு கொண்டு வந்தார்கள். சங்கரும் அதனை தனது மறு பிறப்பாகவே பார்த்தார். முக்கியமாக அனைத்து தீய பழக்கங்களிலிருந்தும் வெளியே வந்த அவர்; கரியரில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். குடும்பத்தினரும் பெரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள்.

மரணமடைந்த ரோபோ சங்கர்: இந்நிலையில் அவர் ஒரு பட ஷூட்டிங்கில் சமீபத்தில் கலந்துகொண்டார். அப்போது திடீரென ரத்த வாந்தி எடுத்து மயக்கமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிரமான சிகிச்சையை கொடுத்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் தனது 46ஆவது வயதில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு திரைத்துறையினர், ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
நடனமாடிய மனைவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்தார்கள். சங்கரின் மனைவி பிரியங்காதான் உச்சக்கட்டமாக உடைந்து போயிருந்தார். நேற்று நடந்த இறுதி ஊர்வலத்தின்போது பிரியங்கா நடனமாடி தனது கணவரை வழியனுப்பி வைத்தார். அது பார்ப்போரை கலங்க செய்தது. இனி சங்கர் போன்று ஒரு கலைஞரை பார்க்கவே முடியாது என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்து.
சங்கரின் லைஃப் ஸ்டைல்: தற்போது சங்கர் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. திரைக்குரல் என்ற யூடியூப் சேனலுக்கு சில நாட்களுக்கு முன்பு அவர் கொடுத்திருந்த பேட்டியில், "நான் சரஸ்வதி நாராயணா காலேஜில்தான் படித்தேன். பாடி பில்டிங்கில் வெல்ல வேண்டும் என்பதுதான் எனது ஆல் டைம் கனவாக இருந்தது. உலகத்திலேயே காஸ்ட்லியான கேம் என்றால் அது பாடி பில்டிங்தான்.
75 முட்டைகள்: மிஸ்டர் மதுரை, மிஸ்டர் காமராஜர் பல்கலைக்கழகம் பட்டமெல்லாம் வாங்கினேன். மிஸ்டர் சென்னை, ஏசியா, யுனிவர்ஸ் போன்ற பட்டங்களை வாங்க வேண்டும் என்பதுதான் கனவு. 1995லேயே நான் சிக்ஸ் பேக் வைத்திருந்தேன். அப்போது பாடி பில்டிங் செய்ய வேண்டுமென்றால் ஒருநாளைக்கு 500 ரூபாய் வேண்டும். தினமும் 75 முட்டைகள் சாப்பிடுவேன். பத்து நாட்கள் எதுவுமே சாப்பிடாமல் இருப்பேன். தண்ணீர் குடிக்காமல் இருப்பேன். அரை கிலோ கோழி கறி, மீன் சாப்பிடுவேன். எனக்கு சிவக்குமார் என்பவர்தான் மாஸ்டராக இருந்தார். காலையில் அவரது ஜிம்மில் மாஸ்டராக பணியாற்றுவேன். பிறகு கல்லூரிக்கு செல்வேன். கல்லூரியை முடித்துவிட்டு இரவில் கோயில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சி செய்ய போவேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











