மீண்டும் சந்தோஷ் நாராயணனை மாற்றிய டைரக்டர்...என்ன காரணம் ?
சென்னை :தமிழ் சினிமாவில் தனக்கென தனியான கதை சொல்லும் பாணியை வைத்துள்ளார் டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ். ஜிகர்தண்டா, பேட்ட, இறைவி, பிசா என வித்தியாசமான கதைகளால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

ஜிகர்தண்டா, இறைவி படங்கள் கார்த்திக் சுப்பராஜ்- சந்தோஷ் நாராயணன் காம்போவில் உருவாக்கப்பட்டன. இந்த படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றன. நல்ல கதை, கதைக்கேற்ற இசை என பலரிடமும் பாராட்டை பெற்றன.
ஒரு மாறுதலாக இருக்கட்டுமே என தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் படத்தில் சந்தோஷ் நாராயணனுக்கு பதில் அனிருத்தை இசையமைக்க வைத்தார். இந்த படம் ஓடிடி.,யில் ரிலீசானது. ஆனால் பாடல்கள் மட்டுமே ஹிட் ஆகின. அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதோடு கடும் விமர்சனங்களை பெற்றது.
தற்போது விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மகான் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். இந்த படத்தில் ஆரம்பத்தில் அனிருத்தை தான் இசையமைக்க ஒப்பந்தம் செய்தார் கார்த்திக் சுப்பராஜ். ஆனால் பிறகு மீண்டும் சந்தோஷ் நாராயணனை மாற்றி இசையமைக்க வைத்தார்.
திடீரென அனிருத்தை மாற்றி சந்தோஷ் நாராயணனையே மீண்டும் இசைக்க வைத்தது ஏன் என கார்த்திக் சுப்பராஜிடம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்பராஜ், குறிப்பிட்ட எந்த காரணமும் கிடையாது. அனிருத் தற்போது பல படங்களை கையில் வைத்து பிஸியாக உள்ளார். அதனால் அவரை மகான் படத்தில் இசையமைக்க வைக்க முடியவில்லை.
அவரது நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இருந்தாலும் தயக்கத்துடன் தான் சந்தோஷ் நாராயணனிடம் பேசினேன். ஆனால் நான் கேட்டதுமே சந்தோஷ் இசையமைக்க தயாராக இருந்தார் என்றார்.
மகான் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் சூறையாட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது. துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த பாடல் வெளியிடப்பட்டது. விக்ரம் ரசிகர்கள் இதை ரசித்து, வைரலாக்கினர். மகான் படத்தின் ஷுட்டிங் முடிவடைந்ததாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடத்தப்பட்டது.


Click it and Unblock the Notifications











