சினிமா தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டை அரிசி... பிரபல நடிகர், நடிகைகளிடம் பெப்சி திடீர் கோரிக்கை!
சென்னை: படப்பிடிப்பு இல்லாமல் கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உதவ வேண்டும் என்று பெப்சி அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது, கொரோனா வைரஸ். அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டி.வி.சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆர்.கே.செல்வமணி
இந்த ரத்து காரணமாக, இந்தியா முழுவதும் சினிமா தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமாவில் தினசரி ஊதியம் பெற்று வாழ்க்கை நடத்தும் ஊழியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை வைத்துள்ளார்.

மிகவும் பாதித்துள்ளது
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சினிமா தொழிலாளர்கள் பல்வேறு வேலை நிறுத்தங்களை சந்தித்து இருக்கிறார்கள். ஆனால், தற்போது நடக்கும் வேலை நிறுத்தம் முற்றிலும் வேறானது. சமூகத்துக்காகவும் தேசத்துக்காகவும் தங்களை தாங்களே முடக்கிக் கொண்டு நடைபெறும் இந்த வேலை முடக்கம், தொழிலாளர்களை மிகவும் பாதித்துள்ளது.

அந்த வேதனை
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் உறுப்பினராக உள்ள 25 ஆயிரம் உறுப்பினர்களில், ஏறக்குறைய பத்தாயிரம் பேர் தினசரி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்துபவர்கள். இன்று காலை லைட்மேன் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் எனக்கு போன் செய்து, சாப்பாடு இல்லாமல் குழந்தைகள் கஷ்டப்படுவதாகச் சொன்னார். அந்த வேதனையை வார்த்தைகளால் எழுத முடியாது.

வேண்டுகோள்
அதனால், இன்று திரைப்படத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகளுக்கு, இயக்குனர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் பணிவான வேண்டுகோளை வைக்கிறேன். நமது சம்மேளனத்தில் 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஒரு மூட்டை அரிசி
அவர்களில் ஒரு வேளை சோற்றுக்கு கஷ்டப்படும் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேர் இருப்பார்கள். ஒரு குடும்பத்துக்கு ஒரு மூட்டை அரிசி தந்தால் அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ இயலும். பத்தாயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால், ஒரு மூட்டை 1250 ரூபாய் என வைத்தால் ரூ. 2 கோடி ஆகிறது. கருணை உள்ளம் படைத்த தாங்கள் உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











