சதுரங்க வேட்டை 2... அரவிந்தசாமி, மனோபாலாவுக்கு உயர் நீதிமன்றம் புது உத்தரவு!
சம்பள பாக்கி தொடர்பாக பிரச்சினையை அரவிந்த்சாமியும், மனோபாலாவும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சதுரங்க வேட்டை-2 பட.த்தின் சம்பள பாக்கி தொடர்பாக நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றம் புது உத்தரவு பிறப்பித்துள்ளது.
மனோபாலா தயாரிப்பில் நட்டி நாயகனாக நடித்த சதுரங்க வேட்டை படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, சதுரங்க வேட்டை 2 படத்தை மனோபாலா தயாரித்து வருகிறார்.

இதில் அரவிந்தசாமி-திரிஷா ஜோடியாக நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. ஆனால் சம்பள பாக்கி தொடர்பான பிரச்சினையால் அரவிந்த்சாமி டப்பிங் பேச மறுத்து வருகிறார்.
இந்நிலையில், தனக்கு சேர வேண்டிய ரூ.1.79 கோடி சம்பள பாக்கியை மனோபாலாவிடம் இருந்து பெற்றுத்தரக் கோரி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த்சாமி வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விளக்கம் அளிக்கும்படி மனோபாலாவுக்கு சம்மன் அனுப்பியது.
இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மனோபாலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'சதுரங்க வேட்டை-2 படத்தின் சம்பள பாக்கி பிரச்சினையை அரவிந்தசாமியுடன் சமரசமாக பேசி தீர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறேன். முதல் தவணையாக அரவிந்தசாமிக்கு அக்டோபர் 10-ந்தேதிக்குள் ரூ.25 லட்சத்தை கொடுத்து விட உறுதி அளிக்கிறேன். சதுரங்க வேட்டை-2 படத்தை கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்காமல் திரைக்கு கொண்டு வர மாட்டோம் என்று கோர்ட்டுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்'' என்று கூறியிருந்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வரும் அக்டோபர் 12-ந்தேதி உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் இருதரப்பினரும் ஆஜராகி, தங்கள் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











