மீண்டும் மீண்டுமா.. மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட்.. என்ன ஆகப் போகுதோ!
சென்னை: பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துணை நடிகையாக தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.
சர்ச்சைக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் சர்ச்சையை கிளப்பி வெளியேறினார்.

படு கவர்ச்சியாக
பிக் பாஸ் பிரபலம் என்கிற அந்தஸ்த்து கிடைத்த நிலையில், சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியாக போட்டோக்களை பதிவிட்டு வந்தார். ஆனால், அவருக்கு லைக்குகள் குவியாமல் ட்ரோல்கள் குவிந்தன. அதன் காரணமாக கடுப்பான மீரா மிதுன், அரசியல் பிரபலங்களையும், சினிமா பிரபலங்களையும் வம்பிழுக்க ஆரம்பித்து சிக்கலில் சிக்கினார்.

விஜய், சூர்யா
நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா குறித்தும் அவர்கள் மனைவிகள் குறித்தும் சர்ச்சையான பேச்சை பேசி பெரிய சிக்கலில் மாட்டினார். விஜய், சூர்யா ரசிகர்கள் படு கேவலமாக மீரா மிதுனை ட்ரோல் செய்யவும் திட்டவும் தொடங்கினார். நடிகை நயன்தாரா முதல் பாலிவுட் நடிகைகள் வரை யாரையும் விடாமல் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்த நிலையில், அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. பின்னர், தமிழ்ச் செல்வி என்கிற பெயரில் சோஷியல் மீடியாவில் போஸ்ட்டுகளை போட ஆரம்பித்தார்.

பட்டியலினத்தவர் பற்றி
திரைப்படத்துறையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

மீரா மிதுன் கைது
அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீன் பெற்றனர். இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆஜராகவில்லை
இந்த வழக்கு நீதிபதி எஸ். அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சாட்சிகள் விசாரணை தொடங்கிய நிலையில், வழக்கின் சாட்சிகளும், மீரா மிதுனின் நண்பர் ஷாம் அபிஷேக்கும், அவரது வழக்கறிஞரும் ஆஜராகி இருந்தனர். ஆனால் மீரா மிதுனும், அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.

மீண்டும் பிடி வாரண்ட்
இதையடுத்து, சாட்சி விசாரணையன்று குற்றம் சாட்டபட்டவர் மற்றும் அவரது வழக்கறிஞர் யாரும் ஆஜராகதது நீதிமன்றத்தை ஏமாற்றுவதாக உள்ளது என தெரிவித்த நீதிபதி, நடிகை மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் இருந்து வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தார். ஏற்கனவே இதேபோல தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால் மார்ச் 23ஆம் தேதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு மீரா மிதுன் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின்னர் தொடர்ந்த ஆஜராகி வந்த நிலையில், இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











