ரஹ்மான் ட்வீட்டுக்கு அர்த்தம் கேட்ட இந்திக்காரர்கள்: தமிழர்கள் பலே விளக்கம்
Recommended Video
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தமிழில் போட்ட ட்வீட் புரியாமல் அர்த்தம் கேட்ட இந்திக்காரர்களுக்கு தமிழ் ரசிகர்கள் தக்க பதில் அளித்துள்ளனர்.
மாநிலக் கல்வியில் ஆங்கிலம், தாய் மொழி தவிர்த்து இந்தியையும் சேர்த்து மூன்று மொழி கொள்கையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்பட்டது. இதையடுத்து இந்தி மொழியை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் மாநிலக் கல்வியில் இந்தியை திணிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம் என்று தென்னிந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

#StopHindiImposition என்ற ஹேஷ்டேக்குடன் தங்களின் எதிர்ப்பை ட்விட்டரில் தெரிவித்தனர். கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி பள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடம் இல்லை என்றாகிவிட்டது.
இந்தி திணிப்புக்கு எதிராக தென்னிந்தியர்கள் ட்விட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோது பஞ்சாபை சேர்ந்தவர் மரியான் பட பாடலை பாடும் வீடியோவை வெளியிட்டு பஞ்சாபில் தமிழ் பரவுகிறது என்று ஆங்கிலத்தில் ட்வீட் போட்டு கலாய்த்திருந்தார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.

இந்நிலையில் வரைவுத் திட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதை அறிந்த அவர், அழகிய தீர்வு "தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல... திருத்தப்பட்டது வரைவு!" என்று தூய தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
அவர் தமிழில் ட்வீட் செய்திருப்பதால் அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டு இந்தி பேசுவர்கள் கமெண்ட் போட்டுள்ளனர். அதற்கு தமிழ் ரசிகர்களோ, நீங்க தமிழ்நாட்டில் பானி பூரியை விற்கலாம் இந்தியை அல்ல என்று கூறி கலாய்த்துள்ளனர்.
அழகிய தீர்வு என்று தான் சொல்ல விரும்பியதை சுருக்கமாக சொன்ன ரஹ்மானை ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். அதிகம் பேசாமல் இசை மூலம் பேசும் ரஹ்மானை எங்களுக்கு பிடித்துள்ளது. இவரை பார்த்தாவது அவர் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் பிரபலம் ஒருவரை வம்புக்கு இழுத்துள்ளனர்.
ட்விட்டரில் கருத்துகள் சொல்வதில் வல்லவராக உள்ளார் ரஹ்மான். அதிகம் டைப் பண்ண மாட்டார், ஆனால் அவர் போடும் ட்வீட் பற்றி நாள் முழுக்க நெட்டிசன்களை பேச வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











