முதல்ல இது தீம் பார்க்தான்.. பிறகுதான் பிலிம் சிட்டியா மாறுச்சு.. ஈவிபியின் கதை!
Recommended Video
சென்னை: ஈவிபியில் நடந்த 'இந்தியன் 2' படப்பிடிப்பில் 3 பேர் பலியாகியுள்ளனர். தீம்பார்க்காக இருந்த ஈவிபி, பிலிம் சிட்டி ஆனது எப்படி?
தற்போது தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அதிகமாக நடந்து வரும் பிலிம் சிட்டி, ஈவிபி. இதைவிட்டால் பெரும்பாலான படப்பிடிப்புகள் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்தான் நடக்கின்றன.
இதுசென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் நசரத் பேட்டையில் இருக்கிறது. இங்குதான் ரஜினி நடித்த 'எந்திரன் 2' படத்தின் முக்கியமான காட்சிகள் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டன.

பிக்பாஸ் வீடு
தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் வீடு இங்குதான் இருக்கிறது. விக்ரம் நடித்த இருமுகன் படத்தில் வரும் பிரமாண்ட லேப் செட், இங்கு போடப்பட்டதுதான். ரஜினியின் 'காலா' படத்துக்காக, மும்பையின் தாராவி செட், இங்குதான் அமைக்கப்பட்டது. விஜய்யின் பிகில் படத்துக்கும் இங்கு செட் அமைக்கப்பட்டிருந்தது. இப்போது விஜய்யின் மாஸ்டர் உட்பட பல்வேறு படங்களுக்கான செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது. சில படங்களின் படப்பிடிப்பு அங்கு நடந்து வருகிறது.

தீம் பார்க்
'ஈவிபி வேர்ல்டு என்ற பெயரில் தீம் பார்க் ஒன்று இருந்ததே ஞாபகம் இருக்கிறதா? அதுதான் ஈவிபி பிலிம் சிட்டியாக மாறியிருக்கிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு விமானப் பணிப்பெண் ஒருவர், இந்தக் கேளிக்கைப் பூங்காவுக்கு வந்திருந்த போது ராட்டினத்திலிருந்து தவறி விழுந்து இறந்தார். இது பரபரப்பானது. இதையடுத்து தீம் பார்க் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

மின்சாரம் தாக்கி
இதனால் சில மாதங்கள் மூடிக்கிடந்த இந்த தீம் பார்க், பின்னர் பிலிம் சிட்டி ஆக்கப்பட்டது. இங்கு அடிக்கடி உயிரிழப்புகள் நடந்துவருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 நடிகைகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீசார் விசாரணை நடத்தினர்.
காலா படப்பிடிப்பின்போது செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி இறந்தார். மற்றொருவர் கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானார்.

பிகில் படப்பிடிப்பில்
விஜய் நடித்த பிகில் படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து கீழே விழுந்ததில் செல்வராஜ் என்பவர் பலியானார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பிலும் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியாகி உள்ளனர். அடுத்தடுத்து ஈவிபியில் உயிர் பலி நடப்பது பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஈவிபி பிலிம் சிட்டி, பெருமாள் சாமி என்பருக்கு சொந்தமானது.


Click it and Unblock the Notifications











