ஒன்லி பீஸ்ன்னு சொல்லிய கேஜிஎஃப் 2வையே ஓரங்கட்டிய காந்தாரா.. அதிக வசூல் சாத்தியமானது எப்படி?
சென்னை: இந்தியாவின் சிஇஓ ஒன்றும் ஒன்லி பீஸ் என இந்த ஆண்டு இந்திய பாக்ஸ் ஆபிஸில் 1100 கோடி வசூல் உடன் கெத்துக் காட்டிய படம் கேஜிஎஃப் 2.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீனிதி ஷெட்டி, சஞ்சய் தத் மற்றும் ரவீணா டாண்டன் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் வசூலை முறியடிக்க கன்னட திரையுலகில் படம் வர இன்னும் சில வருடங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அப்பனுக்கும் அப்பன் ஒருத்தன் இருப்பான் என அந்த படத்தை சொந்த மண்ணான கர்நாடகாவிலேயே வசூல் ரீதியாக முறியடித்துள்ளது ரிஷப் ஷெட்டியின் காந்தாரா.

கலக்கும் கன்னட திரையுலகம்
இந்த ஆண்டு டோலிவுட்டில் ஆர்ஆர்ஆர் படத்தை தவிர வேறு எந்த படமும் பெரியளவில் இந்திய ரசிகர்களை கவரவில்லை. தமிழில் பொன்னியின் செல்வன், விக்ரம் உள்ளிட்ட பெரிய படங்களும் பல சிறிய படங்களும் தொடர்ந்து ஹிட் அடித்து வருகின்றன. பாலிவுட்டில் ஒரு சில படங்களை தவிர்த்து சொல்லிக் கொள்ளும் படி எந்த படமும் இந்த ஆண்டு வெளியாகவில்லை. ஆனால், இந்த ஆண்டு இந்திய சினிமாவை மட்டுமின்றி உலக சினிமா ரசிகர்களையே திரும்பி பார்க்க வைத்துள்ளது கன்னட திரையுலகம்.

கேஜிஎஃப் 2 வசூலின் உச்சம்
ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படமே 1000 கோடி ரூபாய் தான் வசூல் செய்த நிலையில், 100 கோடியில் உருவாக்கப்பட்ட நடிகர் யஷ்ஷின் கேஜிஎஃப் 2 திரைப்படம் 1100 கோடி வசூல் செய்து கன்னட திரையுலகின் மைலேஜை பல மடங்கு உயர்த்தி விட்டது. அப்படிப்பட்ட கேஜிஎஃப் 2 படத்தையே வெறும் 16 கோடியில் உருவான காந்தாரா வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வீழ்த்தியது தான் பெரும் ஆச்சர்யம்.

பல மடங்கு லாபம்
வெறும் 16 கோடி ரூபாய் பொருட்செலவில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி வசூல் ஈட்டி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. கர்நாடகாவில் கேஜிஎஃப் 2 படம் 161.50 கோடி வசூல் செய்த நிலையில், காந்தாரா திரைப்படம் 172 கோடி வசூல் செய்து மிகப்பெரிய லாபாத்தை சாண்டல்வுட்டுக்கு அளித்துள்ளது.

யாருமே நினைக்கல
இரண்டு படங்களையும் ஹோம்பலே தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. காந்தாரா திரைப்படம் இப்படியொரு வெற்றியை அடையும் என யாருமே நினைத்து பார்க்கவில்லை. 72 லட்சம் டிக்கெட்டுகள் விற்ற கேஜிஎஃப் 2 படத்தை விட கர்நாடகாவில் அதற்கு மேல் 23 லட்சம் அதிகம் டிக்கெட்டுகள் விற்பனையாகி கேஜிஎஃப் 2 படத்தை விட 10 கோடி ரூபாய் அதிக வசூலை காந்தாரா அடைந்து இந்த சாதனையை படைத்துள்ளது.

இரண்டிலும் ஒரே வில்லன்
இதில் கூடுதல் வேடிக்கை என்னவென்று பார்த்தால் கேஜிஎஃப் 2 படத்தில் ஒன்றுமே தெரியாத அப்பாவி அரசியல்வாதியாக இருக்கும் அச்சுத குமார் தான் வில்லன். அதே போல காந்தாரா படத்திலும் ஊர் மக்களுக்கு நல்லது செய்யும் மன்னர் பரம்பரையை சேர்ந்த அதே அச்சுத குமார் தான் காந்தாரா படத்திலும் வில்லன். இரண்டு படங்களிலும் அச்சுத குமாரின் கதாபாத்திரமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











